Home இந்தியா “வீரயுக நாயகன் வேள்பாரி” வரலாற்று நூலை ஸ்டாலின் வெளியிட்டார்

“வீரயுக நாயகன் வேள்பாரி” வரலாற்று நூலை ஸ்டாலின் வெளியிட்டார்

2176
0
SHARE
Ad

சென்னை – தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் கணிப்புப்படி அந்தக் காலத்தில் வெளிவந்த கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் சாண்டில்யனின் வரலாற்று நாவல்களை அடுத்து, அண்மையக் காலத்தில் மிகப் பிரபலமாகி, எண்ணற்ற வாசகர்களைக் கவர்ந்த நாவல் ‘ஆனந்த விகடன்’ வார இதழில் வெளிவந்த ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ என்னும் வரலாற்று நாவலாகும்.

சாகித்திய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசன் இந்த நாவலை ஆதாரபூர்வ அம்சங்களுடன் எழுதியிருந்தார். இதே போன்று இவர் வரலாற்றுபூர்வப் பின்னணியோடு எழுதிய ‘காவல் கோட்டம்’ என்ற நாவலுக்கு 2011-ஆம் ஆண்டில் சாகித்திய அகாடமி விருது கிடைத்தது. இந்த நாவல்தான் பின்னர் வசந்தபாலன் இயக்கத்தில் ‘அரவான்’ என்ற திரைப்படமாக வெளிவந்தது.

‘வேள்பாரி’ நாவலில் அந்தக் காலத்து மன்னர்களின் வாழ்க்கை முறைகள், தமிழர்களின் பாரம்பரிய வழக்கங்கள், அவர்களின் போர்முறைகள் போன்ற அம்சங்கள் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தன.

#TamilSchoolmychoice

வாசகர்களின் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் இந்த நாவலுக்கான கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் அற்புதமான வண்ண ஓவியங்களாகத் தீட்டியிருந்தார் ஓவியர் மணியம் செல்வன்.

நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 29) ‘வேள்பாரி’ நூலை வெளியிட்டு, வெங்கடேசனின் படைப்பையும், விகடனின் முயற்சியையும் பாராட்டிப் பேசிய ஸ்டாலின், “வேள்பாரி நாவல் ஒரு புத்தகமல்ல – புரட்சி. கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால் வெங்கடேசனை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்” எனக் கூறினார்.

தமிழர்களின் பெருமையைப் பற்றிப் பேசுவது எவ்வாறு குறுகிய வாதமாக இருக்க முடியும் என்றும் ஸ்டாலின் தனதுரையில் கேள்வி எழுப்பினார்.

1408 பக்கங்களை இரண்டு தொகுதிகளாகக் கொண்ட இந்த நூல், மணியம் செல்வனின் வண்ண ஓவியங்களோடு விகடன் குழுமத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறது.

(படங்கள்: நன்றி : விகடன் இணையத் தளம்)