Home உலகம் சிங்கப்பூரில் கால் பதித்த முதல் தமிழரான நாராயண பிள்ளைக்கு சிலை வைப்பு!

சிங்கப்பூரில் கால் பதித்த முதல் தமிழரான நாராயண பிள்ளைக்கு சிலை வைப்பு!

3266
0
SHARE
Ad

சிங்கப்பூர்: ஒரு நாட்டிற்கு, குறிப்பிட்ட ஒரு தனி நபரின் பங்களிப்பானது எண்ணிலடங்காத வண்ணம் பிரமிக்கத் தக்க நிலையில் இருக்குமாயின், அவரை நினைவு கூறும் வகையில், பொது இடங்கள், பள்ளிகள், அரசு மற்றும் அரசு சாரா நிலையங்களுக்கு அவரது பெயரைச் சூட்டுவார்கள். வரலாற்றில் நிலைத்திருக்கும் படியாக, ஒரு சில இடங்களில் அந்நபரின் உருவச் சிலையை அமைத்தும் நினைவுக் கூருவார்கள்.

இந்த வகையில், சிங்கப்பூர் ஆற்றோரம் சர் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் (Sir Stamford Raffles) சிலைக்கு அருகாமையில், 1819-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் குடியேறிய டான் கோட் செங், முன்ஷி அப்துல்லா சிலைகள் உடன், சிங்கப்பூரில் கால் பதித்த முதல் தமிழரான திரு. நாராயண பிள்ளையின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தீவில் உள்ள முக்கிய முன்னோடித் தலைவர்களில் ஒருவரான நாராயண பிள்ளை,  சர் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் உடன் பினாங்கிலிருந்து 1819-ஆம் ஆண்டு சிங்கப்பூரை வந்தடைந்தார். இத்தீவில் வாழ்ந்த இந்திய சமூகத்தின் முதன்மைத் தலைவராக அவர் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

சங் நீல உத்தமா எனப்படும் பலெம்பாங் இளவரசர், சிங்கம் ஒன்றினை இத்தீவினில் கண்டதாகவும், அதனைத் தொடர்ந்து 1299-ஆம் ஆண்டு சிங்கப்பூரா எனும் ஆட்சிப் பகுதியை தோற்றுவித்தார் என வரலாறு கூறுகிறது. அவரது சிலையும் இப்பெரியவர்களின் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சிங்கப்பூரின் இருநூறு ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை நினைவுக் கூரும் வகையில் இந்நால்வரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.