Home நாடு பொங்கல் பானைகள் தயாரிப்பு தீபாவளி முடிந்ததுமே தொடங்குகிறது!

பொங்கல் பானைகள் தயாரிப்பு தீபாவளி முடிந்ததுமே தொடங்குகிறது!

1132
0
SHARE
Ad

பொங்கல் திருநாள் என்றாலே, இந்நன்னாளில் புதிய மண்பானையும் அடுப்புமாக வைத்து, பொங்கலிடுவதுதான் நம் பாரம்பரியம்.

இதற்காகவே, சிலர் புது அடுப்பு மற்றும் மண்பானை வாங்குவார்கள். வெட்டவெளியில், வீட்டு வாசல் முன், அடுப்பு வைத்து, மண்பானையில் பொங்கல் வைப்பது வழக்கமான ஒன்று. தற்போதைய, அவசரக் காலத்தில், இன்னும் சில வீடுகளில் வெண்கலப்பானையில் பொங்கல் வைப்பது வழக்கமாகிவிட்டது.

பொங்கலுக்கு முக்கியப் பொருளாக அமைவது மண்பானையாகும். இப்பானைகளை முழுமையாக உருவாக்குவதற்கு குறைந்தபட்சம் 10 நாட்கள் தேவைப்படுகின்றன. களிமண், மணல், மற்றும் சாம்பல் நிற மண் ஆகியவற்றைக் கலந்து இப்பானைகள் உருவாக்கப்படுகின்றன. இம்மூலப் பொருட்களை கலவையாக அமைத்து, தேவையற்ற துகள்களை முதலில் அகற்றுவார்கள். பின்பு, அந்தக் கலவையை கழுவி, பானையை, பானை வடிவமைக்கும் இயந்திரத்தில் வைத்து வடிவமைப்பார்கள்.

#TamilSchoolmychoice

பொதுவாக ஒரு வாரம் அல்லது அதற்கும் மேற்பட்டு இப்பானைகள் உலர வைக்கப்படுகின்றன. அதுவும், வானிலையைப் பொருத்து இவ்வாறு செய்யப்படுகின்றன. பின்பு, உலர்ந்த பானைகளை, பானைகள் சுடுவதற்கான சிறப்பு அடுப்பில், வைத்து சுமார் 12 மணி நேரத்திற்கு சுட்டு எடுப்பார்கள். இவ்வாறாக பானைகள் உருவாக்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகின்றன.

இதற்கான, வேலைகள் பொதுவாகவே, தீபாவளி முடிந்ததுமே, பெரும்பாலான பானைத் தொழில் செய்பவர்கள் தொடங்கி விடுவார்கள் எனக் கூறப்படுகிறது. இம்முறை, பொங்கல் திருநாள் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பானை விலைகள் சற்று ஏற்றம் கண்டுள்ள போதிலும், பொதுமக்கள் கடந்த வாரம் தொடங்கி பானைகள் மற்றும் பொங்கலுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கத் தொடங்கிவிட்டனர். இந்தப் பானைகள் தயாரிப்பது குறித்த பெர்னாமா விளக்கப்படத்தை கீழே காணலாம்.

Print