Home நாடு அப்துல் அசிசும் சகோதரரும் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்!

அப்துல் அசிசும் சகோதரரும் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்!

749
0
SHARE
Ad

Datuk-Abdul-Azeez-Abdul-Rahim

கோலாலம்பூர்: முன்னாள் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரும், தபோங் ஹாஜி தலைவருமான டத்தோஶ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் மற்றும் அவரது சகோதரர் டத்தோ அப்துல் லத்திப் அப்துல் ரகிமும், நேற்று (செவ்வாய்க்கிழமை) மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு, இன்று புதன்கிழமை காலை அமர்வு நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்.

அப்துல் அசிஸ் மற்றும் அவரது சகோதரர் நேற்று மாலை 4.30 மணியளவில் ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டனர். 2009-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம், கள்ளப்பண பரிமாற்றம் எதிர்ப்புச் சட்டம், மற்றும் 2001-ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு நிதியம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர்கள் இன்று குற்றம் சாட்டப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, அப்துல் அசிஸ் மற்றும் அவரது சகோதரரும், தங்கள் மீது சுமத்தப்பட்ட பண மோசடி குற்றச்சாட்டினை மறுத்து விசாரணைக் கோரினர். அப்துல் லத்திப் மீது 2 மில்லியன் ரிங்கிட் பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டன.

நிதி மோசடி சட்டம், 2001-ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு நிதியம் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் ஆகியவற்றின் கீழ், அப்துல் அசிஸ் மீது 9 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

800,000 ரிங்கிட் பிணைப் பணம் மற்றும் ஒருவர் உத்தரவாதத்துடன், அப்துல் அசிஸை நீதிபதி அசூரா அல்வி விடுவித்தார். 500,000 ரிங்கிட் பிணை மற்றும் ஒருவர் உத்தரவாதத்துடன் அப்துல் லத்தீப் விடுவிக்கப்பட்டார்.