Home நாடு பிஎஸ்எச்: ஜனவரி 28-ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும்!

பிஎஸ்எச்: ஜனவரி 28-ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும்!

1598
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிஎஸ்எச் (BSH) என அழைக்கப்படும் பந்துவான் சாரா ஹிடுப் ராக்யாட் (Bantuan Sara Hidup Rakyat ) திட்டத்தின் முதல் கட்டப் பண வழங்கீடு ஜனவரி 28-ஆம் தேதி முதல் செய்யப்படும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று (வியாழக்கிழமை) அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மக்களின் மீது அக்கறைக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் இத்திட்டம் அமைகிறது என அவர் கூறினார். 2019-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டதற்கு இணங்க, பி40 எனப்படும் குறைவாக வருமானம் பெறும் அடித்தட்டு மக்களுக்காக இத்திட்டம் தொடரப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பிரிம் (BR1M) என அழைக்கப்பட்டு வந்த இத்திட்டம் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்பு பிஎஸ்எச் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பழைய தரவுத்தளத்தில் உள்ள பெயர்களை அடிப்படையாகக் கொண்டு இம்முறை இப்பண வழங்கீடு செயல்படுத்தப்படும் எனவும், முதல் கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர்,  இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் தகுதியற்ற பெறுனர்களை தரவுத்தளத்திலிருந்து விலக்கி, ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் பொருட்டு நடைமுறைகள் மேம்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

2019-ஆம் ஆண்டு 4.1 மில்லியன் குடும்பங்களுக்கு, 300 ரிங்கிட், ஒரு குடும்பத்திற்கு எனும் அடிப்படையில் முதல் கட்டத்தில் பணம் செலுத்தப்படும். மொத்தமாக 1.2 பில்லியன் ரிங்கிட் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

பெறுனர்கள் பணத்தை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் பெறலாம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.