Home நாடு “கேமரன் மலை போனது போனதுதான். பிரமையில் வாழும் மஇகா” – பி.இராமசாமி

“கேமரன் மலை போனது போனதுதான். பிரமையில் வாழும் மஇகா” – பி.இராமசாமி

1818
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு “கடன்” மட்டுமே கொடுத்ததாகவும், அடுத்த 15-வது பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதியில் மஇகா மீண்டும் அங்கு போட்டியிடும் என்றும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறியுள்ளது குறித்து கருத்துரைத்த பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி “மஇகா பிரமையில் வாழுகிறது. அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ ஒரு தொகுதி கூட மஇகாவுக்கு வழங்காது” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

“அப்படியென்றால் இதே போன்று கடந்த அக்டோபரில் விட்டுக் கொடுக்கப்பட்ட, மஇகாவின் மற்றொரு தொகுதியான போர்ட்டிக்சன் தொகுதி குறித்து விக்னேஸ்வரன் எதுவும் சொல்லாதது ஏன்?” என்றும் ஜசெக மத்திய செயலவை உறுப்பினரான இராமசாமி கேள்வி எழுப்பினார்.

பாரம்பரியமாகப் போட்டியிட்டு வந்த போர்ட்டிக்சன் தொகுதியையும் மஇகா கடந்த ஆண்டில் போட்டியிடாமல் அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது. ஆனால், அந்தத் தொகுதியில் அம்னோவும் போட்டியிடாமல், பாஸ் கட்சி போட்டியிட்டது.

#TamilSchoolmychoice

“மஇகா தலைமைத்துவம் பிரமையில் வாழுகிறது. அம்னோவுக்கு கேமரன் மலையைக் கடன் கொடுத்தோம் என்பது உண்மையிலேயே நகைச்சுவையான ஒன்றா அல்லது மஇகாவின் கௌரவத்தை மீட்டெடுக்க இவ்வாறு விக்னேஸ்வரன் கூறுகிறாரா?” என்றும் இராமசாமி நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த 3 தவணைகளாகப் போட்டியிட்டு வென்று வந்த கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை இந்த முறை மஇகா அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது. அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளரான ரம்லி முகமட் நோர் ஜனவரி 26 நடைபெற்ற கேமரன் மலை இடைத் தேர்தலில் அபார வெற்றியைப் பெற்றார்.