Home வணிகம்/தொழில் நுட்பம் ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல் விலகினார்

ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல் விலகினார்

1228
0
SHARE
Ad

புதுடில்லி – பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜெட் ஏர்வேஸ் என்ற விமான நிறுவனத்தைத் தொடக்கி அதனை வெற்றிகரமான வணிகக் குழுமமாக உருவாக்கிய நரேஷ் கோயல் இன்று திங்கட்கிழமை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வாரியக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.

அவரது பதவி விலகலைத் தொடர்ந்து அவரது மனைவியும் நிர்வாக வாரியக் குழுவின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார்.

1 பில்லியன் டாலர் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு புதிய முதலீட்டாளர்களை ஈர்த்து அந்நிறுவனத்தை மறுசீரமைப்பதில் நரேஷ் கோயல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் தனது தலைவர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்கள் 1,500 கோடி ரூபாய் புதிய முதலீட்டை ஏற்பாடு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதன்மை கடன் வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது மொத்தக் கடனையும் ஒரு ரூபாய் மதிப்பில் ஏற்றுக் கொள்ளும் என்றும் அந்தக் கடனுக்கான தொகைக்கு ஈடாக பங்குகளாக மாற்றிக் கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன் கொடுத்த வங்கியின் சார்பில் இரண்டு புதிய இயக்குநர்கள் ஜெட் ஏர்வேஸ் வாரியத்தில் நியமிக்கப்படுவார்கள்.

பின்னர் இந்தப் பங்குகள் புதிய முதலீட்டாளர்களிடம் விற்பனை செய்யப்படும். இந்த மறு சீரமைப்புத் திட்டம் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவு காணும்.

இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் பங்குகள் 13 விழுக்காடு உயர்ந்தன.

ஜெட் ஏர்வேஸ் 119 விமானங்களைத் தற்போது கொண்டிருந்தாலும், அதில் 54 விமானங்கள் அதற்குரிய கட்டணங்கள், பாக்கிகள் செலுத்தப்படாத காரணத்தால் அவை சேவையில் ஈடுபடுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.