Home நாடு பிரதமரும், நிதியமைச்சரும் நாட்டின் நிதி நிலைக் குறித்து உண்மையை மறைக்கின்றனர்!

பிரதமரும், நிதியமைச்சரும் நாட்டின் நிதி நிலைக் குறித்து உண்மையை மறைக்கின்றனர்!

1136
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உலகளவில் மலேசிய பங்குச் சந்தை மிக மோசமான நிலையை அடைந்துள்ளதாக மசீச இளைஞர் பகுதித் தலைவர் வோங் சியாவ் திங் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். இந்த மோசமான நிலைக்கு பிரதமரும், நிதி அமைச்சரும் முழுப் பொறுப்பினை ஏற்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலை நல்ல முறையில் இருப்பதாக பிரதமரும் , நிதியமைச்சரும் அடிக்கடி கூறி வந்தாலும், நாளுக்கு நாள் அது சரிவடைந்து வருவதே உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த செவ்வாயன்று, புளூம்பெர்க் உலகப் பங்குச் சந்தைகள் முன்னேற்றமான நிலையை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது, ஆயினும், அவ்வரிசையில் மிகவும் மோசமான பதிவை மலேசிய பங்கு சந்தை பதிவிட்டிருந்தது.

அறிவார்ந்த சந்தை நிபுணர்களின் அறிக்கைகள் படி, இந்த ஏமாற்ற போக்கு அடுத்த ஆண்டு வரை தொடர வாய்ப்பு உள்ளது எனவும், மக்கள் சிக்கலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஒரு திட்டவட்டமான அடித்தளமே இல்லாமல் நாட்டின் கடன் 1 டிரில்லியன் ரிங்கிட்டுக்கு உயர்ந்துள்ளது என நிதியமைச்சரான லிம் குவான் எங் தன்னிச்சையாக கருத்துகளை வெளியிட்டு மக்களைக் குழப்பியதுதான் மிச்சம் என அவர் கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் நிதி அமைச்சர் டாய்ம் சாய்னுட்டின் கருத்துகள் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறியப்போதும், லிம் அதனை செவிமடுக்காமல் செயல்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

அதிகாரத்தைக் கைப்பற்றிய பின், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் நல்ல செய்தியை வெளியிட்டதுடன், மோசமான செய்தியை மறைத்து, மக்களின் கண்களை மறைக்க, புள்ளியியல் விவரங்களை மாற்றி கூறியுள்ளனர்.  அதற்கு, சரியான சான்று, பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவுதான் என அவர் தெளிவுப்படுத்தினார்.

இம்மாதிரியான சூழல் தொடர்ந்தால், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நாட்டின் மீது இருந்த நம்பிகைக் சரிந்து, நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுவிடும் என அவர் கூறினார்.