Home உலகம் ஜூலியன் அசாஞ்ச் மீது பாலியல் குற்ற வழக்கு – சுவீடன் மீண்டும் விசாரணை!

ஜூலியன் அசாஞ்ச் மீது பாலியல் குற்ற வழக்கு – சுவீடன் மீண்டும் விசாரணை!

740
0
SHARE
Ad

ஸ்டாக்ஹோம் – விக்கிலீக்ஸ் என்ற இணையத் தளம் மூலம் முக்கிய நாடுகளின் அரசாங்க இரகசியங்களை பகிரங்கமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்ச் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்கவிருப்பதாக சுவீடன் இன்று திங்கட்கிழமை அறிவித்தது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்ச் ஆகஸ்ட் 2010-ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டிற்கு வந்திருந்தபோது, பாலியல் ரீதியாக இரண்டு பெண்கள் மீது தாக்குதலை நடத்தினார், பாலியல் வல்லுறவு மேற்கொண்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இலண்டனில் இருந்த அவரை சுவீடனுக்கு நாடு கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் இலண்டனில் உள்ள இக்குவேடோர் நாட்டின் தூதரகத்தில் அரசியல் புகலிடம் நாடி தஞ்சமடைந்தார்.

#TamilSchoolmychoice

அப்போது முதல் அந்த தூதரகத்தை விட்டு வெளியே வராமல் 7 ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்த அவருக்கு இனியும் அரசியல் புகலிடம் வழங்க முடியாது எனக் கூறி, இக்குவேடோர் அரசாங்கம் அவருக்கான அரசியல் பாதுகாப்பை மீட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து 47 வயதான கணினி நிபுணரான அவரைக் கைது செய்த பிரிட்டன் அரசாங்கத்தின் சிறைப் பாதுகாப்பில் அவர் தற்போது இருந்து வருகிறார்.

இராணுவ இரகசியங்களைப் பெற்றார் என அவர் மீது குற்றம் சாட்டிய அமெரிக்கா அவரை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளது.

இதைத் தொடர்ந்துதான் சுவீடனும் ஜூலியன் அசாஞ்ச் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்கவிருப்பதாக இன்று அறிவித்துள்ளது.