Home இந்தியா ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் – 144 தொகுதிகளைப் பெற்று முதல்வராகிறார் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் – 144 தொகுதிகளைப் பெற்று முதல்வராகிறார் ஜெகன்மோகன் ரெட்டி

772
0
SHARE
Ad

அமராவதி – (மலேசிய நேரம் பிற்பகல் 4.00 மணி நிலவரம்) இந்த முறை இந்தியப் பொதுத் தேர்தலோடு ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட்டன. இன்று வெளியான முடிவுகளின்படி மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் 144 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னணி வகிக்கிறது.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுகு தேசம் கட்சி 29 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே முன்னணி வகித்து மாபெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி எதிர்வரும் மே 30-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்கிறார்.

#TamilSchoolmychoice

ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஒரு காலத்தில் ஆந்திராவின் முதல்வராகவும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் ஆந்திராவில் செல்வாக்குடன் திகழ்ந்தவர். ஹெலிகாப்டர் விபத்தொன்றில் அவர் காலமானதைத் தொடர்ந்து அவரது மகனான ஜெகன்மோகன் ரெட்டி அரசியலில் கால் பதித்தார்.

முதலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தந்தையின் வழியில் பணியாற்றிய ஜெகன் பின்னர் காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை 2010-ஆம் ஆண்டில் தோற்றுவித்தார்.

ஒன்பது ஆண்டுகளில் மாநிலத்தின் ஆட்சியைத் தனது 46 வயதில் கைப்பற்றி ஆந்திராவின் முதல்வராகி சாதனை புரிந்துள்ளார் ஜெகன்.