Home இந்தியா உத்தரப் பிரதேசம் நாடாளுமன்றம் : பாஜக 59; எஸ்பி-பிஎஸ்பி கூட்டணி 20; காங்கிரஸ் 1

உத்தரப் பிரதேசம் நாடாளுமன்றம் : பாஜக 59; எஸ்பி-பிஎஸ்பி கூட்டணி 20; காங்கிரஸ் 1

666
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியப் பொதுத் தேர்தலில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட மாநிலம் உத்தரப் பிரதேசம். அண்மையக் காலத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் வரிசையாக தோல்வி அடைந்தது – அகிலேஷ் யாதவ்வின் சமஜ்வாடி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்த கூட்டணி – என பல்வேறு சவால்களுடன் களமிறங்கிய பாஜக சரியான வியூகம் வகுத்த காரணத்தால் உத்தரப் பிரதேசத்தின் பெரும்பாலான நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 59 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அகிலேஷ்-மாயாவதி கூட்டணி வெறும் 20 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி பரிதாபமாக 1 கட்சியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியாகும்.

#TamilSchoolmychoice

ராகுல் காந்தியே காங்கிரசின் பாரம்பரியத் தொகுதியான அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணியிடம் தோல்வியடைந்தார்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெற்ற வெற்றியே அந்தக் கட்சி தனித்த பெரும்பான்மை பெற்றதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அகிலேஷ்-மாயாவதி முன்னெடுத்த சாதி அரசியலும் தோல்வியடைந்திருக்கிறது. இருவரும் இணைவதால் உத்தரப் பிரதேசத்தின் இரு பெரும் சாதிகளும் இணைகின்றன என்றும் அதன் மூலம் அவர்களுக்கு மாபெரும் வெற்றி கிட்டும் என்றும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டதால் எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன.

எனினும், எப்போதும் மோதிக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்களிடையே இந்த இணக்கம் காணப்படவில்லை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அடுத்த பிரதமர் மோடி என்பதை ஆணித்தரமாக பாஜக முன்னிருத்திய வேளையில் அகிலேஷ்-மாயாவதி வெற்றி பெறுவதால் அவர்கள் பிரதமராகப் போவதில்லை என்ற எண்ண ஓட்டம் வாக்காளர்களிடையே நிலவியதால் உத்தரப் பிரதேச வாக்காளர்கள் பாஜக பக்கம் ஒட்டு மொத்தமாகத் திரும்பியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.