Home நாடு மஇகா தலைமைச் செயலாளர்: வேள்பாரி விலகினார்! அசோஜன் புதிய தலைமைச் செயலாளர்

மஇகா தலைமைச் செயலாளர்: வேள்பாரி விலகினார்! அசோஜன் புதிய தலைமைச் செயலாளர்

927
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகா தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக டத்தோஸ்ரீ வேள்பாரி சாமிவேலு அறிவித்துள்ளார். முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் மகனான அவர் வணிகத்தில் கவனம் செலுத்தும் நோக்கில் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 14-ஆம் தேதி மஇகா தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற 54 வயது வேள்பாரி கடந்த சில மாதங்களாகவே தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகும் எண்ணத்தைக் கொண்டிருந்ததாகவும் கட்சி நடவடிக்கைகள் சுமுகமாகத் தொடர வேண்டும் என்ற நோக்கில் தான் அந்தப் பதவியில் தொடர்ந்து நீடித்ததாகவும் கூறினார்.

“அனைத்துலக நிறுவனம் ஒன்றுடன் கூட்டு வணிக ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்ற நான் முயற்சி செய்து வருகின்ற காரணத்தால் அடிக்கடி வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வணிக ஒப்பந்தத்தின் விதிகளுள் ஒன்று எந்த அரசியல் கட்சியின் உச்சநிலைக் குழுவிலும் நான் அங்கம் வகிக்கக் கூடாது என்பதாகும். எனவேதான், எனது பொறுப்பிலிருந்து நான் விலகுகிறேன்” என வேள்பாரி கூறியதாக பிரி மலேசியா டுடே இணைய ஊடகம் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

வேள்பாரிக்குப் பதிலாக புதிய தலைமைச் செயலாளராக டத்தோ அசோஜனை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நியமித்துள்ளார்.

அதே வேளையில் இதுவரையில் அசோஜன் வகித்து வந்த மஇகா நிர்வாகச் செயலாளர் பொறுப்பு மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் கூட்டரசுப் பிரதேச பத்து தொகுதியைச் சேர்ந்தவருமான ஏ.கே.இராமலிங்கத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அடுத்து:

“கட்சியினரின் நாடித் துடிப்பை அறிந்தவர் – படிப்படியாக வளர்ந்தவர்” அசோஜன் நியமனத்திற்கு மஇகாவில் பரவலான வரவேற்பு