Home உலகம் கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்ற ஆப்கானிஸ்தான்

கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்ற ஆப்கானிஸ்தான்

737
0
SHARE
Ad

பிரிஸ்டல் (இங்கிலாந்து) – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10 நாடுகளில் பலம் வாய்ந்த குழுக்களாகக் கருதப்பட்ட இலங்கையும், பாகிஸ்தானும் கடந்த இரண்டு நாட்களாக மோசமான ஆட்டத் திறனை வெளிப்படுத்திய வேளையில், அண்மைய சில ஆண்டுகளாக மட்டும் அனைத்துலக அரங்கில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் நேற்று நடப்பு உலகக் கிண்ண வெற்றியாளரான ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் கடுமையான போராட்டத்தை வழங்கியது.

2015 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளில் வெற்றியாளராக வாகை சூடிய நாடு ஆஸ்திரேலியாவாகும்.

நேற்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக நாணயத்தை சுண்டிப் போட்டதில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. மொத்தமுள்ள 50 ஓவர்களில் 38.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்கள் எடுத்து முதல் பாதி ஆட்டத்தை முடித்துக் கொண்டது ஆப்கானிஸ்தான்.

#TamilSchoolmychoice

208 ஓட்டங்கள் என்பதை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா 34.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 209 ஓட்டங்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் 100-க்கும் மேற்பட்ட ஓட்டங்களையே எடுத்த நிலையில், முன் அனுபவம் இல்லாத ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 207 ஓட்டங்கள் எடுத்தது சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து இலங்கையைத் தோற்கடித்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை இலண்டன் ஓவல் அரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வங்காளதேசமும் மோதுகின்றன.