Home நாடு யூதாரில் நடைபெற்ற யுபிஎஸ்ஆர் பயிற்சிப் பட்டறை

யூதாரில் நடைபெற்ற யுபிஎஸ்ஆர் பயிற்சிப் பட்டறை

846
0
SHARE
Ad

கம்பார் – மலேசியாவின் தனியார் பல்கலைக்கழகங்களில் முதன்மையான துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம் (யூதார்), கிந்தா செலாத்தான் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கான யுபிஎஸ்ஆர் பயிற்சிப் பட்டறையைக் கடந்த மே மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்திருந்தது.

சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டுமென்ற பல்கலைக்கழகத்தின் கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து முதன்முறையாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக இம்முயற்சியை அடிப்படைக் கல்விக்கான மையம் – Centre for Foundation Studies (CFS – Kampar) என்ற அமைப்பு முன்னெடுத்தது.

பேராக் மாநில கல்வி இலாகாவின் அனுமதியோடும் கிந்தா செலாத்தான் மாவட்ட கல்வி இலாகாவின் முழு ஆதரவோடும் நடைபெற்ற இப்பட்டறையில் 10 தமிழ்ப்பள்ளிகள் கலந்து கொண்டன. வழக்கமான பட்டறையாக இல்லாமல் மெதுநிலை மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் பட்டறையாக இது அமைந்தது.

#TamilSchoolmychoice

கிந்தா செலாத்தான் மாவட்டத்தில் இவ்வாண்டு யுபிஎஸ்ஆர் மதிப்பீட்டுத் தேர்வை எழுதவிருக்கும் 150 மாணவர்களில் 100 மாணவர்களுக்கு இப்பட்டறையில் கலந்து பயன்பெற முதன்மை வாய்ப்பு வழங்கப்பட்டது. மாணவர்களோடு சுமார் 25 ஆசிரியர்களும் இப்பட்டறையில் கலந்துகொண்டனர்.

அறிவியல், ஆங்கிலம், கணிதம், தமிழ், மலாய் என ஐந்து பாடங்களை உள்ளடக்கிய இப்பட்டறை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு காலை மணி 8.30 முதல் மாலை மணி 5.30 வரை நடத்தப்பட்டது. இப்பட்டறையை திறன்மிகு ஆசிரியர்கள் திரு. குமரன் காந்தியப்பன் (அறிவியல்), திருமதி. கவிதா ஆறுமுகம் (ஆங்கிலம்), திரு. சதீஸ்குமார் (கணிதம்), திரு. ம நவீன் (தமிழ்), திரு. சரவணன் சத்யானந்தன் (மலாய்) ஆகியோர் சிறப்பான முறையில் வழிநடத்தினர்.

பட்டறையின் நிறைவு விழாவில் CFS – இயக்குனர் தான் லீ சியூவ், CFS – கலை, சமூக அறிவியல் துறையின் தலைவர் பாக்கியலட்சுமி, கிந்தா செலாத்தான் மாவட்ட கல்வி இலாகாவின் அதிகாரி அஹமாட் மஸ்வான் ஆகியோருடன் பள்ளித் தலைமையாசிரியர்களும் கலந்துகொண்டனர்.

மாவட்ட கல்வி இலாகாவின் அதிகாரி அஹமாட் மஸ்வான் உரையாற்றுகையில், மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள பட்டறையாக அமைந்துள்ளதாகவும், யூதாரின் இந்த முயற்சிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.

CFS – இயக்குனர் தான் லீ சியூவ் உரையாற்றுகையில் இதுமாதிரியான பட்டறை மாணவர்களுக்கு மேலும் ஆழமான புரிதலையும் நல்லதொரு அனுபவத்தையும் கொடுக்குமென்று குறிப்பிட்ட அவர், பட்டறையில் பங்குபெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

பட்டறையில் பங்குபெற்ற மாணவர்கள், இப்பட்டறை வாயிலாக நிறைய பயனான தகவல்கள் கிடைக்கப் பெற்றதாகவும், தேர்வுகளில் செய்கின்ற பிழைகளையும் தவறுகளையும் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறியது அவர்களுக்கு நல்ல புரிதலைக் கொடுத்திருப்பதாகவும் மேலும் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெறுவதற்கு நம்பிக்கையூட்டுவதாகவும் இருப்பதாகக் கூறினர்.

பட்டறையில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் கூறுகையில், இப்பட்டறையானது மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்ததாக குறிப்பிட்டனர். திறன்மிகு ஆசிரியர்களின் வழிக்காட்டல் ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் மீதான நுட்பங்களையும் திறன்களையும் அறிந்துகொள்ளும் களமாக அமைந்தது என்றனர்.

ஒட்டுமொத்தமாக நல்லதொரு பட்டறையை இலவசமாக மாணவர்களுக்கு ஏற்பாடு செய்திருப்பது குறித்து யூதார் பல்கலைக்கழகத்திற்கும் அதன் ஏற்பாட்டுக் குழுவிற்கும் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

தேர்வு காலங்களில் பள்ளிகளிலும் இதுபோன்ற பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டாலும், எல்லாப் பள்ளிகளையும் ஒன்றிணைத்து ஒரே இடத்தில் பட்டறை நடத்தப்படும்போது விரயங்கள் கட்டுப்படுத்தப்படுவதாகவும், வசதியற்ற தோட்டப்புற, புறநகர் பள்ளிகளுக்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமைவதாகவும் ஏற்பாட்டுக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இனி வரும் காலங்களில் இம்மாதிரியான பட்டறைகள் மாணவர்களின் தேவையும் அவசியத்தையும் கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுமெனவும் கூறப்பட்டது.