Home நாடு “யாரும் என்னை வற்புறுத்தவில்லை, நானே பதவி விலகினேன்”!- முகமட் சுக்ரி

“யாரும் என்னை வற்புறுத்தவில்லை, நானே பதவி விலகினேன்”!- முகமட் சுக்ரி

629
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வற்புறுத்தலின் காரணமாகத்தான் தாம் ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் பொறுப்பை விட்டுக் கொடுத்ததாகக் கூறப்படும் அவதூறுகள் மற்றும் கருத்துகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் சுக்ரி அப்துல் மறுத்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்தே தமக்கு அந்த எண்ணம் இருந்ததாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தில் இருக்கும் உயர்மட்ட அரசியல்வாதிகளின் தூண்டுதலினால் தாம் அப்பதவியை விட்டுக் கொடுத்ததாகக் கூறப்படுவதை சுக்ரி மறுத்தார். இன்று சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

#TamilSchoolmychoice

தேவையற்ற வதந்திகள், அவதூறுகளால் சூழ்நிலையை மேலும் குழப்பமடைய செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். புதிதாக பதவியேற்றிருக்கும் லத்தீஃபா கோயாவுக்கு போதுமான ஆதரவை வழங்கி அவர் அப்பொறுப்பினை நன்முறையில் செயல்படுத்த அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக லத்தீஃபா கோயா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களிடத்தில் அதிருப்தி ஏற்பட்டது. பிரதமரின் தற்சார்பு நிலையான இந்த முடிவினை அரசாங்கத் தரப்பினரும், எதிர்க்கட்சியினரும் தொடர்ச்சியாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.