Home வணிகம்/தொழில் நுட்பம் 14 மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனைத் திருப்பிச் செலுத்திய அனில் அம்பானி

14 மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனைத் திருப்பிச் செலுத்திய அனில் அம்பானி

911
0
SHARE
Ad

மும்பை – அண்ணன், முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக உலா வர – தம்பி அனில் அம்பானியோ (படம்) நிதிப் பிரச்சனைகளிலும் கடன் பிரச்சனைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளார் என்பது இந்திய வணிக வட்டாரங்களில் சுவாரசியத்துடன் இரசிக்கப்படும் ஒரு முரண்பாடாகும்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் தங்களின் தந்தை திருபாய் அம்பானி காலமான பின்னர் இணைந்து ஒருமித்த மனதோடு வணிகத்தில் ஈடுபட முடியாத அண்ணன் தம்பிகள் இருவரும், தந்தை சேர்த்து வைத்த சேர்த்து வைத்த கோடிகளை பிரித்துக் கொண்டு தனித் தனியாக தங்களின் வணிக விரிவாக்கத்தை மேற்கொண்டனர்.

கால ஓட்டத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராகவும் உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவராகவும்  உயர்ந்தார்.

#TamilSchoolmychoice

தனது மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அனில் அம்பானி, கடந்த 14 மாதங்களில் மட்டும் தாங்கள் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய ரூபாயில் 350 பில்லியன்) கடன்களை அடைக்கத் திருப்பிச் செலுத்தியுள்ளதாக அறிவித்தார்.

தங்கள் நிறுவனங்களின் சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தங்களின் கடன்களை திருப்பிச் செலுத்தியதாக அனில் அம்பானி கூறினார்.

அவரது தொலைத் தொடர்பு நிறுவனம் திவால் ஆகும் நிலைமையில் உள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், செலுத்தப்படாத வங்கிக் கடன்களுக்கு எதிரான  அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக 60 வயதான அனில் அம்பானியின் நிறுவனங்களின் வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தொடர்ந்து கடன்களைத் திரும்பச் செலுத்திவிட்டு குறைந்த கடன்களோடு சிறந்த கட்டமைப்போடு தனது நிறுவனங்கள் செயல்படும் என்றும் அனில் அம்பானி நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.

எனினும் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகள் எதற்கும் அனில் அம்பானி பதிலளிக்க முன்வரவில்லை.