Home நாடு ரிசா அசிஸ் – 248 மில்லியன் அமெரிக்க டாலர் கள்ளப் பணப் பரிமாற்றம் குற்றச்சாட்டு –...

ரிசா அசிஸ் – 248 மில்லியன் அமெரிக்க டாலர் கள்ளப் பணப் பரிமாற்றம் குற்றச்சாட்டு – 1 மில்லியன் பிணை

651
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோரின் முதல் கணவருக்கு பிறந்த மகனான ரிசா அசிஸ் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

அம்லா எனப்படும் கள்ளப் பணப் பரிமாற்றத்திற்கு எதிரான சட்டத்தின் (Amla – Anti-Money Laundering, Anti-Terrorism Financing and Proceeds of Unlawful Activities Act) கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டார். 248 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய பணப் பரிமாற்றத்திற்காக அவர் குற்றங்களை எதிர்நோக்குகிறார்.

குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் அவர் ஒரு மில்லியன் பிணையில் இருநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுதலை செய்யப்பட்டார். அவரது அனைத்துலகக் கடப்பிதழ் வழக்கு முடியும் வரை நீதிமன்றத்தால் முடக்கப்படும்.

#TamilSchoolmychoice

நேற்று வியாழக்கிழமை அவரைக் கைது செய்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பின்னர் பிணையில் விடுவித்தது.

ரிசா அசிஸ் யார் என்பதை விளக்கும் பெர்னாமா வரைபடம்

ரிசா ஹாலிவுட் படத் தயாரிப்பாளரும் ஆவார். இவர் ரெட் கிரானைட் பிக்சர்ஸ் (Red Granite Pictures) என்ற ஆங்கில படத் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.

இந்த நிறுவனம்தான் ‘தெ வோல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்’ என்ற புகழ்பெற்ற ஆங்கிலப் படத்தை, லியோர்னாடோ டி காப்பிரோவைக் கதாநாயகனாகக் கொண்டு தயாரித்தது.

1எம்டிபியில் இருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டுதான் ரெட் கிரானைட் நிறுவனம் ஆங்கிலப் படத் தயாரிப்பில் முதலீடு செய்தது என்பதுதான் ரிசா அசிஸ் மீதான ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கான அடிப்படையாகும்.

இந்தப் படத்திற்காக பெற்ற சம்பளத்தை லியோர்னாடோ டி காப்பிரோ அமெரிக்க அரசாங்கத்தின் நீதித் துறைக்குத் திருப்பிக் கொடுத்து விட்டார். ரிசா அசிசும் தனது நிறுவனப் பணத்தில் இருந்து கணிசமானத் தொகையை அமெரிக்க அரசாங்கத்திற்கு திருப்பிச் செலுத்தியிருக்கிறார்.