Home உலகம் கிரிக்கெட் : இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் நின்றது – மீண்டும் தொடர்கிறது

கிரிக்கெட் : இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் நின்றது – மீண்டும் தொடர்கிறது

1867
0
SHARE
Ad

மான்செஸ்டர் – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் அரையிறுதி ஆட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜூலை 9) இங்கு நடைபெற்ற இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது இரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது.

எனினும் அந்த ஆட்டம் இன்று புதன்கிழமை பிரிட்டன் நேரப்படி காலை 10.30 மணிக்கு (மலேசிய நேரம் 5.30 மாலை) மீண்டும் தொடங்குகிறது.

நாணயத்தைச் சுண்டிப் பார்த்ததில் வெற்றி பெற்ற நியூசிலாந்து பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. நாணயத்தைச் சுண்டியதில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் நாங்களும் முதலில் பேட்டிங்கைத்தான் தேர்வு செய்திருப்போம் என்று இந்திய அணியின் தலைவர் வீராட் கோலி கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

காரணம், புகழ்பெற்ற மான்செஸ்டர் ஓல்ட் டிராஃப்போர்ட் அரங்கில் இதுவரையில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணப் போட்டிகளில் எந்த குழு முதலில் பேட்டிங் செய்ததோ அந்தக் குழுதான் வெற்றி பெற்றிருக்கிறது.

எனவே, இந்த நம்பிக்கையை முறியடிக்கும் வகையில் இந்தியா நியூசிலாந்தைத் தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே எழுந்திருந்தது.

மிகச் சிறப்பாக பந்து வீசிய இந்தியக் குழு நியூசிலாந்தை அதிகமாக ஓட்டங்கள் எடுக்க விடாமல் தடுமாறச் செய்தது. 46.1 ஓவர்களில் 211 ஓட்டங்களை மட்டுமே எடுத்த நியூசிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், இன்னும் 23 பந்து வீச்சுகளே எஞ்சியிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

கடுமையான மழை காரணமாக, ஆட்டம் தொடர முடியாமல் பாதியிலேயே முடிந்தது.

இன்றைய ஆட்டம் தொடரும்போது 23 பந்துகளை நியூசிலாந்து வீசியபிறகு ஆட்டம் தொடங்கும் என்பதால் இந்திய விளையாட்டாளர்களுக்கு சாதகமாக முடியலாம். களைப்பின்றி அவர்கள் ஓட்டங்கள் எடுக்க முடியும்.

எனவே கிரிக்கெட் இரசிகர்களுக்கு குறிப்பாக இந்திய இரசிகர்களுக்கு இன்றைய ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்படும் பரபரப்பான ஒன்றாக அமையும்.

மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இந்த ஆட்டம் நாளை  வியாழக்கிழமை ஜூலை 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த இரண்டு அரையிறுதிச் சுற்றுகளிலும் வெற்றி பெறும் குழுக்களின் உலகக் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 14-ஆம் தேதி நடைபெறுகிறது.