Home நாடு அஸ்மின் குறித்து அன்வாரின் கருத்துக்கு பிறகு பிகேஆரில் பிளவு ஏற்படும் சூழல்!

அஸ்மின் குறித்து அன்வாரின் கருத்துக்கு பிறகு பிகேஆரில் பிளவு ஏற்படும் சூழல்!

691
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளியில் ஒருவேளை இருப்பது அஸ்மின் அலிதான் என கண்டறியப்பட்டால், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நேற்று புதன்கிழமை பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் வெளியிட்ட வெளிப்படையான நிலைப்பாட்டை தொடர்ந்து கட்சிக்குள் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

அன்வாரின் அக்கூற்றை தொடர்ந்து  பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரான அஸ்மின் அலி, தம்மை பற்றி அன்வார் கருத்துரைப்பதற்கு முன்னதாக அவர் அவரை முதலில் சரிபார்த்துக் கொள்ளும்படியான கருத்தினை வெளியிட்டுள்ளார். மேலும், அன்வாரின் அக்கருத்துக்கு பிகேஆர் கட்சியின் முக்கியத் தலைவர்களும் தங்களின் எதிர்ப்புக் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பான ஆய்வறிக்கையை காவல் துறையினர் தலைமை அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ள நிலையில், அந்த காணொளியில் உள்ள நபர்கள் குறித்து இன்னும் வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

அஸ்மின் விடுப்பில் செல்லவோ அல்லது பதவி விலகவோ கூடாது என்ற நிலைப்பாட்டை தாம் ஆரம்பத்தில் எடுத்ததாக அன்வார் கூறியிருந்த நிலை மாறி, தற்போது, சமீபத்திய முன்னேற்றங்களை கவனத்தில் கொண்டு அவர் அவ்வாறு செய்வதே சிறப்பு என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அந்த காணொளி விவகாரமாக பேசிய போது, காவல் துறையினரின் விசாரணை நிலுவையில் இருப்பதால் விடுப்பில் செல்ல விரும்பினால் அஸ்மின் செல்லலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.