Home One Line P1 அத்திவரதர் தரிசனம் – நீட்டிப்பு இல்லை – உயர்நீதிமன்றம் முடிவு

அத்திவரதர் தரிசனம் – நீட்டிப்பு இல்லை – உயர்நீதிமன்றம் முடிவு

829
0
SHARE
Ad

சென்னை: காஞ்சி அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கும் நீதிமன்றம் ஆகம விதிகளில் தலையிட முடியாது எனக் கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆகம விதிகளின்படி ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று புதன்கிழமை நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.

அத்திவரதரை இதுவரை 89.75 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் எனவும் தெரிவித்த பொன்னையா, பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால் அத்திவரதர் தரிசன முறையை மாற்றவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

அத்திவரதர் வைபவத்தில் நாளை வியாழக்கிழமை 12 மணியுடன் பிரமுகர்களுக்கான (விஐபி) தரிசனம் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) பிரமுகர்களுக்கான தரிசனம் கிடையாது. 17-ம் தேதி அன்று ஆறு கால பூஜைகள் நடத்தப்பட்டு, ஆகம விதிகளின்படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்துவரப்படும் அத்திவரதர் சிலை, 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படும்

இந்நிலையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி குளத்தில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை மீண்டும் வருகிற 17-ஆம் தேதி குளத்தில் வைக்கப்பட உள்ளது

அத்திவரதரை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தனர்.

இதற்கிடையில், நேற்று நள்ளிரவு வாக்கில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்.