Home One Line P1 “எளிமையும், இரசனையும் கலந்த சிறந்த உரை” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவுக்கு முகநூலில் பாராட்டு

“எளிமையும், இரசனையும் கலந்த சிறந்த உரை” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவுக்கு முகநூலில் பாராட்டு

1243
0
SHARE
Ad

சென்னை – (மலேசியாவின் கணினித் துறை நிபுணர் முத்து நெடுமாறன் கடந்த புதன்கிழமை ஆகஸ்ட் 14-ஆம் தேதி  சென்னையிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உமா மகேசுவரி என்பவர் “வெந்து தணிந்தது காடு” என்ற தலைப்பிலான தனது முகநூல் பக்கத்தில் முத்து நெடுமாறனின் உரை குறித்த தனது கருத்துகளைப் பின்வருமாறு தெரிவித்திருந்தார். அந்தக் கருத்துகளை செல்லியல் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்)

“எழுத்துரு வடிவமைப்பாளர்,மின்னுட்ப வல்லுநர், முரசு அஞ்சல் ,செல்லினத்தை உருவாக்கியவர் மலேசிய வாழ் தமிழர் முத்து நெடுமாறன் அவர்கள்.

இன்று மாலை தரமணி ,ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ( Roja Muthiah Research Library) அவரது உரையைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது.

#TamilSchoolmychoice

அச்சுக் கோப்பு முறைக்கு முழுக்க முழுக்க உலோகத்திலான எழுத்துருகளைப் பயன்படுத்தியதில் குறைகள் இருந்தன.ஆனால் அந்தக் குறைகளில் கூட அழகியல் இருந்தது எனக் கூறுகிறார்.இவற்றைத் தீர்க்க அவருக்கிருந்த  குறிக்கோள், கணினிகளில், அதன் பின், கையடக்கக் கருவிகளில் தமிழ் எழுத்துருகளைச் சேர்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகள், பன்மொழிப் பயன்பாட்டிற்கு அவர் ஆற்றிய பணிகள் என அமைதியான நீரோட்டம் போலிருந்தது அவரது பேச்சு!

இவர் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அதிகம் சுற்றுவது தெருக்களில் தானாம்.ஏனெனில் அப்போது தான் சுவர் விளம்பர எழுத்துகள், மற்ற விளம்பரப் பலகைகள் ஆகியவற்றைக் காண முடியும் என்பதால்…

பொதுவாக சுவரில் எழுதுபவர்கள் படிப்பறிவற்றவர்கள்..அவர்கள் ஒரு ஓவியம் போல் எழுத்துக்களைப் பதிய வைத்துக் கொண்டு பிரம்மாண்டமாக எழுதுகிறார்கள்.அளவு பெரிதாக இருப்பதால் சிற்சில  குறைகள் கண்ணுக்குத் தென்படுவதில்லை!

அவர் பேச்சின் சில துளிகள்…

“ஓர் எழுத்துருவை உருவாக்க எட்டு முதல் ஒன்பது மாதங்கள் தேவைப்படுகிறது.”

“கணினிக்கு உகந்த மொழி சமஸ்கிருதம் என்கிற ஒரு சர்ச்சை இருக்கிறது.சமஸ்கிருதமோ, தமிழோ இல்லை. உண்மையில் கணினிக்கு ஏற்றவை இரண்டே எழுத்துகள் தான் அவை 0 மற்றும் 1.”

(ஆனால் கணிணி உள்ளீட்டு மொழியாக இடம் பெற்ற முதல் இந்திய மொழி தமிழ் என்பது நாம் அறிந்தது)

ஓர் எழுத்துருவின் வெற்றி அந்த எழுத்துரு பயன்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தைப் படிக்க நம்மை ஈர்ப்பதே. அதன் பின் தொடர்ச்சியாகப் படிக்க வைப்பது படைப்பாளனின் கரங்களில் இருக்கிறது.

தமிழ் மொழியைப் பொருத்த வரை அழகியலை விட உள்ளடக்கத்திற்கே ( content) அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.”

எழுத்துரு பற்றி அவர் பேசும்போது அவர் முகத்தில் தென்பட்ட அந்த இரசனை அவரது ஈடுபாட்டைத் தெள்ளத் தெளிவாகக் காண்பித்தது.

எனக்கு இத்துறை பற்றி அதிகம் தெரியாவிடினும் அவர் எளிமையாகப் புரியும்படி பேசியது சிறப்பு!

அவர் பேசியதில் என்னைக் கவர்ந்த வரி…

“அழகியலை அறிவியல் கொண்டு கணிக்க முடியாது”

-நன்றி: உமா மகேசுவரி முகநூல் பக்கம் “வெந்து தணிந்தது காடு”