Home One Line P2 சீனாவின் 70-வது குடியரசு தினத்தில் 18 வயது ஹாங்காங் போராட்டவாதிக்கு துப்பாக்கிச் சூடு

சீனாவின் 70-வது குடியரசு தினத்தில் 18 வயது ஹாங்காங் போராட்டவாதிக்கு துப்பாக்கிச் சூடு

608
0
SHARE
Ad

ஹாங்காங் – தனது இராணுவ பலத்தையும், பொருளாதார பலத்தையும் எடுத்துக் காட்டும் விதமாக சீனா கம்யூனிஸ்ட் நாடாக மாறிய 70-வது குடியரசு தினத்தை இன்று கோலாகலமாகக் கொண்டாடிய வேளையில், அதன் இன்னொரு பிரதேசமான ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்ந்தன.

ஹாங்காங்கில் ஜனநாயகப் போராட்டவாதிகள் தொடர்ந்து தங்களின் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்த வேளையில், 18 வயது போராட்டவாதியை நோக்கி ஹாங்காங் காவல் துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டிருப்பது புதிய சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

சுடப்பட்ட அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

மேலும் 31 ஹாங்காங் போராட்டவாதிகள் காயங்களுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் இருவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இருவரில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டவராவார்.

ஹாங்காங் ஆர்ப்பாட்டத்தின்போது இன்று செவ்வாய்க்கிழமை போராட்டவாதிகளுக்கும் கலகத் தடுப்பு காவல் துறையினருக்கும் இடையில் பல இடங்களில் மோதல்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் பல இடங்களில் தீவைத்தனர். காவல் துறையினரோ கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தி கூட்டத்தினரைக் கலைக்க முற்பட்டனர். 4 மாதங்களாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் இப்போதுதான் முதன் முறையாக துப்பாக்கிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மேலும் விரிவடையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.