Home One Line P2 சிதம்பரத்துக்கு வயிற்றுவலி – சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் சிறைக்குத் திரும்பினார்

சிதம்பரத்துக்கு வயிற்றுவலி – சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் சிறைக்குத் திரும்பினார்

587
0
SHARE
Ad

புதுடில்லி – ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் திடீரென வயிற்று வலியால் அவதிப்பட்டதைத் தொடர்ந்து புதுடில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சைக்குப் பின்னர் சிதம்பரம் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட சிதம்பரம் தொடர்ந்து பல முறை மேல்முறையீடு செய்தும் இன்னும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படாமல் சிறையிலேயே இருந்து வருகிறார்.

#TamilSchoolmychoice

சிறை உணவு தனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என சிதம்பரம் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு ஒருவேளை உணவு – அதுவும் சைவ உணவு – அவரது வீட்டிலிருந்து அளிக்கப்பட நீதிமன்றம் அனுமதித்தது.

இந்நிலையில் திடீரென தனக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக சிதம்பரம் காவலர்களிடம் கூறியதைத் தொடர்ந்து பலத்த காவலுடன் அவர் ஏய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்குரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, உரிய மருந்துகள் தரப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீண்டும் சிறைக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

அவரது பிணை (ஜாமீன்) மனு மீதான வழக்கு எதிர்வரும் அக்டோபர் 15-ஆம் தேதி விசாரிக்கப்பட விருக்கிறது.