Home One Line P2 ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை – 49 மணி நேரம் நீடிக்கும் மீட்புக் குழுவின் போராட்டம்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை – 49 மணி நேரம் நீடிக்கும் மீட்புக் குழுவின் போராட்டம்

1099
0
SHARE
Ad
தமிழகத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகி வரும் சுஜித்தின் மீட்புப் பணிகள்

திருச்சி – (மலேசிய நேரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி நிலவரம்) தமிழகத்தின் திருச்சி நகருக்கு அருகிலுள்ள நடுக்காப்பட்டி என்ற கிராமத்தில் பயன்படுத்தப்படாமல் கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்ற 2 வயதுக் குழந்தையை மீட்கும் பணிகள் இன்னும் நீண்டு கொண்டே போகின்றன.

சுமார் 30 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை, மீட்கும் முயற்சியின் போது 80 அடி ஆழத்திற்குக் கீழே சென்றுவிட்டதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நீண்டு கொண்டே போனதில் தற்போது 100 அடி ஆழத்தில் அந்தக் குழந்தை சிக்கிக் கொண்டுள்ளது.

அந்த ஆழ்துளைக் கிணறு 600 அடிகள் வரை தோண்டப்பட்ட கிணறு என்று கூறப்படுகின்றது. அந்தக் குழந்தை மேலும் கீழே சென்று விடாமல் இருக்க, வெளியில் தெரியும் அந்தக் குழந்தையின் கை ‘ஏர்லோக்’ (Air-lock) முறையில் கம்பிகளைக் கொண்டு இறுக்கிப் பிடிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த 49 மணி நேரமாக மீட்புக் குழுவினர் சுஜித்தை மீட்கப் போராடி வருகின்றனர். அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5.40 மணி வாக்கில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் இன்றைக்கு மூன்றாவது நாளாகத் தொடர்கின்றன.

குழந்தை விழுந்திருக்கும் குழிக்கு அருகில் மற்றொரு குழியைத் தோண்டி இரு குழிகளுக்கும் இடையில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது குழியைத் தோண்டும் போது பாறைகள் குறுக்கிட்டதால் குழிதோண்டும் இயந்திரத்தின் பற்கள் சேதமடைந்தன.

இதன் காரணமாக, அதைவிட 3 மடங்கு சக்தி வாய்ந்த குழிதோண்டும் இயந்திரம் கொண்டுவரப்பட்டு தற்போது இரண்டாவது குழி சுமார் 36 அடிவரை தோண்டப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்டாலும், தமிழக மக்கள் அனைவருமே அந்தக் கொண்டாட்டத்தில் முழு மகிழ்ச்சியுடன் ஈடுபட முடியாமல் சோகத்துடனும், உருக்கத்துடனும் சுஜித் என்ற சிறுவன் உயிருடன் மீட்கப்படுவானா என்ற என்ற ஏக்கத்துடனும்  வழிபாடுகள் நடத்திக் கொண்டு, தொலைக்காட்சிகளின் முன்னர் ஆர்வத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.

புதிதாகத் தோன்றப்படும் இரண்டாவது குழியிலிருந்து, குழந்தை விழுந்து கிடக்கும் பகுதிக்கு சுரங்கம் அமைத்து, அந்தக் குழந்தையை வெளியே கொண்டு வர 6 தீயணைப்புப் படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

(மேலும் விவரங்கள் தொடரும்)