Home One Line P2 மகராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி

மகராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி

798
0
SHARE
Ad
சிவசேனாவின் உத்தவ் தாக்கரே-சோனியா காந்தி-சரத் பவார்

மும்பை – அண்மையில் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுற்ற நிலையில் பாஜக-சிவசேனா கூட்டணி பெரும்பான்மை சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்றாலும், அந்தக் கட்சிகளுக்கிடையே அடுத்த முதல்வர் யார் என்ற பிரச்சனையிலும், அடுத்த ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி காரணமாகவும் அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பாஜக அதிகத் தொகுதிகளை வென்ற கட்சியாக இருந்தாலும் மொத்தமுள்ள 288 இடங்களில் 105 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சிவசேனா 56 தொகுதிகளைக் கைப்பற்றியது.

சரத்பவார் தலைமையிலான நேஷனலிஸ்ட் காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 44 கட்சிகளிலும் மகராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வாகை சூடின.

#TamilSchoolmychoice

சிவசேனா-பாஜக கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்க முடியாத காரணத்தால், பாஜக தன்னால் ஆட்சி அமைக்க முடியாது என பின்வாங்கியது.

அடுத்த பெரிய கட்சியான சிவசேனாவை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைக்க சிவசேனாவும் காங்கிரஸ் மற்றும் நேஷனலிஸ்ட் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. நேற்றுடன் சிவசேனாவுக்கு வழங்கப்பட்ட கெடு முடிவடைய, அடுத்த பெரிய கட்சியான நேஷனலிஸ்ட் கட்சியை ஆளுநர் அழைத்து இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிவரை (இந்திய நேரம்) ஆட்சி அமைக்க அவகாசம் வழங்கினார். எனினும் அந்த கால அவகாசத்திற்குள் இந்த மூன்று கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு, ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்படாத காரணத்தால் ஆளுநர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் பாஜக மத்திய அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு தொடுத்துள்ளது.

பாஜக தவிர்த்த மற்ற மூன்று கட்சிகளும் தொடர்ந்து அடுத்த ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.