Home One Line P2 காசா: நவம்பர் 12 தொடங்கிய இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் 32 பேர் மரணம்!

காசா: நவம்பர் 12 தொடங்கிய இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் 32 பேர் மரணம்!

657
0
SHARE
Ad

காசா: காசா பகுதியில் இஸ்ரேலிய படைகள் நடத்திய இரண்டு நாள் தாக்குதலில் குறைந்தது 32 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக துருக்கிய செய்தி நிறுவனமான அனடோலு, பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த திடீர் தாக்குதலில் 30 குழந்தைகள் மற்றும் 13 பெண்கள் உட்பட 100 பேர் காயமடைந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை காலை, இஸ்லாமிய ஜிஹாட் குழுவின் ஆயுதப் பிரிவான அல்குட்ஸ் படைப்பிரிவு, தாக்குதலில் ஒரு களத் தளபதி கொல்லப்பட்டதாகக் கூறியது.

#TamilSchoolmychoice

முன்னதாக, வடக்கு காசா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை செலுத்த முயன்றதால், இஸ்ரேல் இராணுவம் இஸ்லாமிய ஜிஹாதிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்தியதாகக் கூறியது.

செவ்வாய்க்கிழமை காலை முதல் காசாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி 250-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய படைகள் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாட் குழுவின் மூத்த தளபதி பஹா அபு அல்அட்டா மற்றும் அவரது மனைவி அஸ்மா ஆகியோரைக் கொன்ற இஸ்ரேலிய விமானத் தாக்குதலைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை காசாவில் பதற்றம் வெடித்தது.

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இஸ்லாமிய ஜிஹாட் தலைவர் அக்ரம் அல்அஜூரியை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்களும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

அல்அஜூரியின் மகன் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால், இஸ்லாமிய ஜிஹாட் தலைவரான அவர் எவ்வித காயமுமின்றி உயிர் பிழைத்தார்.