Home One Line P1 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியர்கள் எதிர்கொள்ள ஒப்பந்தம் – வேதமூர்த்தி தகவல்

5ஜி தொழில்நுட்பத்தை இந்தியர்கள் எதிர்கொள்ள ஒப்பந்தம் – வேதமூர்த்தி தகவல்

876
0
SHARE
Ad

புத்ராஜெயா: “புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசு மலேசிய இந்தியர்களின் சமூக – பொருளாதார மேம்பாட்டில், குறிப்பாக இளைஞர்களின் முன்னேற்றத்திலும் அவர்களின் சுய வளர்ச்சியிலும் அதிக அக்கறை கொண்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த ஆண்டில் மலேசிய இந்தியர் சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரிவான மித்ராவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் இளைஞர்களின் மேம்பாடு, அவர்களுக்கான தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்பு குறித்தெல்லாம் மித்ரா சார்பில் அதிக அக்கறை காட்டப்படுகிறது” என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“வேலைவாய்ப்பு சந்தையில், தங்களுக்கான வாய்ப்பைத் தேடும் இந்திய இளைஞர்கள் பொதுவான கல்வித் தகுதியைக் கொண்டிருக்கின்றனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது போதுமானதாக இல்லை. உதாரணத்திற்கு, தகவல் தொழில்நுட்பத்துறையில் பொதுவான(Generic IT) டிப்ளோமா அல்லது இளங்கலைப் பட்டத்தைக் கொண்டிருப்பதால் வேலை கிடைப்பதில்லை. அதனால்தான் தற்போதைய ஐந்தாம் தலைமுறை(5-ஜி) தகவல் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப ஐசிடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் (Information-Communication-Technology) நம் மாணவர்களை ஈடுபடுத்தி, குறுகிய காலப் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் பெற்றுக் கொடுக்கிறோம். இதன் தொடர்பில், அமேசோன், மைக்ரோசோப்ட், டெல், சிஸ்கோ சிஸ்டம், டாடா கொன்சல்டன்சி, கேபிஎம்ஜி, பிடபிள்யூசி (PWC), ஹூவா வெய் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் மித்ரா புரிந்துணர்வை எட்டியுள்ளது” என்றும் வேதமூர்த்தி தெரிவித்தார்.

“அண்மையில் செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம், கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் மற்றும் படிப்பைப் பாதியில் நிறுத்திய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் உறுதி செய்துள்ளோம். இளைய சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு நகர்த்தும் முன்னோடித் திட்டம் இது” என தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.