Home One Line P1 கவிப்பேரரசு வைரமுத்துவின் “தமிழாற்றுப்படை” நூலுக்கு கோலாலம்பூரில் அறிமுக விழா

கவிப்பேரரசு வைரமுத்துவின் “தமிழாற்றுப்படை” நூலுக்கு கோலாலம்பூரில் அறிமுக விழா

1094
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் தமிழ் மொழியை வளர்த்தெடுத்ததில் முக்கியப் பங்காற்றியுள்ள 24 ஆளுமைகள் குறித்து ‘தமிழாற்றுப் படை’ என்ற பெயரில் தனது அழகுத் தமிழில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கும் நூலின் அறிமுக விழா நாளை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) மாலை 6.30 மணிக்கு மஇகா தலைமையகக் கட்டடத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறுகிறது.

தமிழக ஊடகங்களில் வைரமுத்து எழுதிய இந்தக் கட்டுரைகள் பின்னர், அவராலேயே வாசிக்கப்பட்டு, ஒவ்வொரு ஊரிலும் அரங்கேற்றம் கண்டன. ‘தமிழாற்றுப் படை’ என்ற நூலுடன் அவரது உரையோவியங்களும் ஒலிப் பேழைகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைரமுத்து தனது கட்டுரைகளை அரங்கேற்றிய வரிசையில், கவிஞர் அப்துல் ரகுமான் குறித்து அவர் எழுதிய கட்டுரை திருப்பூரில் மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் கடந்த 6 ஜனவரி 2019-ஆம் நாள் அரங்கேற்றம் கண்டது.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் நடைபெறும் வைரமுத்துவின் ‘தமிழாற்றுப் படை’ நூல் அறிமுக விழா மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வாழ்த்துரை வழங்குகிறார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரனும் நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றுகிறார்.

வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

தமிழாற்றுப் படை – நூல் குறிப்புகள்
தமிழாற்றுப் படை – நூல் குறித்து பிரபலங்கள் கூறிய கருத்துகள்