Home One Line P2 உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகியா சுந்தர் பிச்சை?

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகியா சுந்தர் பிச்சை?

1251
0
SHARE
Ad

சான் பிரான்சிஸ்கோ – உலகில் உள்ள முன்னணி நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரிகளாக இயங்கும் நிர்வாகிகளில் ஊடகங்களில் அடிக்கடி தலைப்புச் செய்தியாக இடம் பெறுபவர் தமிழ் நாட்டுக்காரரான சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றிருக்கும் அவரது புதிய வருமானம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு மனிதருக்கு – அதுவும் தமிழருக்கு – இவ்வளவு சம்பளமா என அனைவரும் வாய் பிளந்து நிற்கிறார்கள்!

பிறக்கும் 2020 புத்தாண்டில் சுந்தர் பிச்சையின் மாத சம்பளம் மட்டும் 2 மில்லியன் அமெரிக்க டாலர். இதைத் தவிர 240 மில்லியன் டாலர் மதிப்புள்ள கூகுள் நிறுவனத்தின் பங்குச் சந்தை பங்குகளும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்த 240 மில்லியன் டாலர் மதிப்புடைய பங்குகளில் 90 மில்லியன் அவரது செயலாற்றலின் அடிப்படையில் வழங்கப்படுவதாகும். அதாவது, அவருக்கு வழங்கப்படும் குறிப்பிட்ட கால கட்டத்திற்குள், அவருக்கென நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்குகளை அவர் அடைந்தால் மட்டுமே இந்த 90 மில்லியன் மதிப்புடைய பங்குகள் அவருக்குக் கிடைக்கும்.

கடந்த வாரத்தில் அவருக்கு 90 மில்லியன் டாலர் மதிப்புடைய கூகுள் நிறுவனப் பங்குகள் வழங்கப்பட்டன. இவை 2022 இறுதிக்குள் அவருக்கு முழு உரிமையாகும். இதைத் தவிர மேலும் முறையே 120 மில்லியன் டாலர் மற்றும் 30 மில்லியன் டாலர் மதிப்புடைய இரண்டு தொகுப்புகளாக அவருக்கு பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது அவருடைய செயலாற்றலுக்காக அல்லாமல் அவர் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் வேலை செய்வதற்காக வழங்கப்படுவதாகும்.

2004-ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் டூல்பார், கூகுள் குரோம் போன்ற தேடு பொறிகளை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து உலகிலேயே அதிகம் பேர் கணினிகளில் விரும்பிப் பயன்படுத்தும் தேடுபொறிகளாக இவை புகழ் பெற்றன.

இதனைத் தொடர்ந்து 2015-இல் அவர் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் பெற்றார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கூகுள் வழி அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் பங்குகளைக் கொண்டிருக்கும் தாய் நிறுவனமான அல்பாபெட் நிறுவனத்தின் இயக்குநர் வாரியத்தில் 2017-இல் சுந்தர் இணைந்தார்.

அண்மையில் அல்பாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்தப் புதிய சம்பளங்கள், சலுகைகள் அடிப்படையில் உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நிறுவன நிர்வாகிகளில் ஒருவராக சுந்தர் உருவெடுத்திருக்கிறார்.