Home One Line P1 “அரசியல் இலாபத்திற்காக பழி விளையாட்டைத் தூண்டிவிடுவது இராமசாமியின் அரசியல் வித்தை!”- எம். அசோஜன்

“அரசியல் இலாபத்திற்காக பழி விளையாட்டைத் தூண்டிவிடுவது இராமசாமியின் அரசியல் வித்தை!”- எம். அசோஜன்

903
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலா தெர்லாவில் விவசாயப் பண்ணைகள் இடிக்கப்படுவது குறித்து பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கூறிய கருத்துகளை மஇகா பொதுச்செயலாளர் எம்.அசோஜன் சாடியுள்ளார்.

இராமசாமியின் தூண்டுதல் மற்றும் பதவி வெறியினால்தான் தற்போதைய நிலைமைக்கு வழிவகுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேமரன் மலையில் பண்ணைகள் இடிக்கப்படுவதற்கு தேசிய முன்னணி செய்த துரோகம் என்ற, மலேசியாகினியில் வெளிவந்த இராமசாமியின் கருத்துத் தொகுப்பைக் குறிப்பிட்டு பேசிய அசோஜன், இந்தக் குற்றச்சாட்டு ஆதாரம் இல்லாத அப்பட்டமான பொய் தவிர வேறொன்றுமில்லை என்று கூறினார்.

#TamilSchoolmychoice

விவசாயிகளின் துயரங்களுக்கு மஇகா ஒரு இணக்கமான தீர்வை உறுதி செய்யும் என்று நம்ப வைத்து, பகாங் அரசாங்கத்தின் வெளியேற்ற உத்தரவுகளுக்கு எதிராக அவர்கள் முன்னர் பெற்ற இடைக்கால தடை உத்தரவை மீண்டும் பெற மஇகா தூண்டியதாக அக்கட்டுரை சித்தரிக்கிறது.” என்று அசோஜன் சுட்டிக் காட்டினார்.

செப்டம்பர் 30-ஆம் தேதி விவசாயிகள் தடை உத்தரவை மீண்டும் பெற்றதில் மஇகாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கூற விரும்புகிறோம். இந்த வழக்கைத் தாக்கல் செய்த விவசாயிகளில் ஒருவரிடமிருந்து எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. மஇகாவின் எந்தவொரு குறுக்கீடும் இன்றி தங்கள் விருப்பப்படி தடை உத்தரவை மீண்டும் பெற்றுள்ளனர்.”

மஇகாவுக்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளை  உடனடியாக இராமசாமி திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கோரினார். இல்லையெனில், அக்கட்சி அவருக்கு எதிராக அவதூறு வழக்குத் தாக்கல் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேமரன் மலையில் உள்ள கோலா தெர்லா நீர்ப்பிடிப்பு பகுதியில் சட்டவிரோத காய்கறி பண்ணைகளுக்கு எதிராக பகாங் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைக்கு, எதிர்ப்புத் தெரிவித்த போராட்டத்தில் முன்னாள் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தனது புகழ் மற்றும் அரசியல் இலாபத்திற்காக பழி விளையாட்டைத் தூண்டிவிடுவது இராமசாமியின் அரசியல் வித்தை என்று அசோஜன் கூறினார்.

உண்மை என்னவென்றால், உங்களது தூண்டுதல் மற்றும் பதவி வெறி, விவசாயிகளின் இன்றைய தோல்விக்கு காரணமாக அமைந்தது, இராமசாமி.” என்று அசோஜன் குறிப்பிட்டுள்ளார்.