Home கலை உலகம் கமலுக்கு ஆதரவாக திரையுல பிரமுகர்கள் அறிக்கை

கமலுக்கு ஆதரவாக திரையுல பிரமுகர்கள் அறிக்கை

595
0
SHARE
Ad

Barathirajah---Slider-2சென்னை, ஜனவரி 27 – நடிகர் கமல்ஹாசன் என்றைக்குமே சமூக பொறுப்புடன் நடந்து கொள்பவர் என தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இந்த சமூகத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக அவர் “விஸ்வரூபம்’ படத்தை எடுக்கவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

கமல் படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, இந்தியாவில் உள்ள அனைத்து படைப்பாளிகளுக்கும் வைக்கப்பட்ட தடையாகக் கருதுகிறேன்.

#TamilSchoolmychoice

கமல் வியாபாரத்துக்காக தன்னை ஒருபோதும் அடகு வைத்தவர் அல்ல. கமலுக்கு என்றைக்குமே சமூக பொறுப்புணர்வு உள்ளது. அப்படிப்பட்ட ஒரு கலைஞர் சமூகத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக படம் எடுப்பாரா?

மத்திய அரசால் அமைக்கப்பட்ட தணிக்கைக் குழு அங்கீகரித்த ஒரு திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்று சிலர் சொன்னால் இந்திய அரசியல் சட்டத்தில் நாம் எங்கே நின்று நியாயம் கேட்க வேண்டும் என்று புரியவில்லை. நிகழ்வுகளை, பார்த்ததை, அனுபவித்ததை ஒரு சமூக வலியோடு பூடகமாக திரையில் கூறுவது படைப்பாளியின் தார்மிகமான படைப்புச் சுதந்திரம். ஒரு நடுநிலை கலைஞனுக்கு கை கொடுக்க வேண்டியது நம் கடமை என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பார்த்திபன்: தணிக்கைக் குழுவினர் 6 பேர் பார்த்து எப்படி முடிவெடுப்பது என மடக்கு வாதம் செய்வதானால், 100 கோடி மக்கள் சார்பாக 100 பேர் முடக்கு வாதம் செய்வதும் தீவிரவாதமே. மக்கள் சக்தி மாபெரும் சக்தி. குற்றம் என தெரிந்தால் கொந்தளித்து விடுவார்கள்.

எனவே “விஸ்வரூபம்’ படத்தை அவர்கள் பார்வைக்கு ரிலீஸ் செய்வோம். மக்களே சிறந்த தீர்ப்பளிப்பார்கள். கமல்ஹாசனுக்கு ஏற்படும் நஷ்டம் மறைமுகமாக சினிமாவுக்கே. ஒரு தனிமனிதனுக்காக ஓர் இனத்தின் சினத்தை பயன்படுத்த வேண்டாம் என்பதே என் மென் கோரிக்கை என இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அமீர்: தணிக்கைக் குழு அனுமதி அளித்த பிறகு, அதன் விளைவாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கருதி தமிழக அரசே “விஸ்வரூபம்’ படத்துக்கு தடை விதித்திருக்கிறது. நீதிபதிகள் இறுதி முடிவெடுக்க காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் “விஸ்வரூபம்’ படத்தைப் பார்க்காமல் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. நான் சொல்லக் கூடிய கருத்துக்கள் வேறுவிதமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடக் கூடாது என்கிற காரணத்தால் நீதிமன்றத் தீர்ப்புக்கு பின், படத்தை பார்த்து விட்டுத்தான் கருத்துச் சொல்ல முடியும். மேலும் இது குறித்து திரைத்துறை சார்ந்த யாரும் தனிப்பட்ட முறையில் கருத்துக்களை பதிவு செய்து பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என அமீர் கேட்டுக் கொண்டுள்ளார்.