Home 13வது பொதுத் தேர்தல் தெலுக் கெமாங் நாடாளுமன்றத்தில் ம.இ.கா. வேட்பாளர் யார் என்ற குழப்பம் வலுக்கிறது

தெலுக் கெமாங் நாடாளுமன்றத்தில் ம.இ.கா. வேட்பாளர் யார் என்ற குழப்பம் வலுக்கிறது

520
0
SHARE
Ad

indexபோர்ட்டிக்சன் ,ஜன.31- பொதுத்தேர்தல் வந்தவுடன்  யார் வேட்பாளர்கள் என்று விவரம் தெரிந்து விடும். ஆனால் அதற்கு முன்னால் பல ஆருடங்களும் வெளியாகிக் கொண்டிருக்கும்.

நாட்டின் பொதுத்தேர்தல் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் வேளையில், தேசிய முன்னணியில் அங்கத்துவம் வகிக்கும் ம.இ.கா. வேட்பாளர்கள் குறித்து பலவிதமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் வரும் பொதுத்தேர்தலில் தெலுக் கெமாங் நாடாளுமன்றத்தில் எதிர்பார்க்கப்பட்ட டத்தோ சோதிநாதனுக்கு (படம்) பதிலாக ம.இ.கா.வின் தேசியப் பொதுச் செயலாளர் டத்தோ முருகேசன் நிறுத்தப்படலாம் என்று நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டாலும் டத்தோ சோதிநாதன் தன்னால் முடிந்த உதவிகளை தெலுக் கெமாங் வட்டார மக்களுக்கு செய்து வருவது அனைவரும் அறிந்ததே.

ஆதலால் வரும் பொதுத்தேர்தலில் டத்தோ சோதிநாதனுக்கு பதிலாக ம.இ.கா.வின் தேசியப் பொதுச் செயலாளர் டத்தோ முருகேசன் நிறுத்தப்படுவார் என்ற செய்தியால் அவ்வட்டாரத்தைச் சேர்ந்த மூவினத்தைச் சேர்ந்த 10,000 பேர் மறியலில் ஈடுபடவுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

இருவருமே கடந்த தேர்தலில் தோல்வி கண்டவர்கள்!

டத்தோ முருகேசன் தெலுக் கெமாங் தொகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டால் அவருக்கு எதிராக பல ம.இ.கா கிளைகளே எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கும் எனத் தெரிகின்றது.

தொகுதியின் உதவித் தலைவர் விந்தன், சோதிநாதன்தான் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டுமென ஏற்கனவே ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தெலுக் கெமாங் தொகுதி காங்கிரஸ் தலைவர் எம்.வேலுவும் சோதிநாதனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் கடந்த முறை இதே தொகுதியில் தோல்வியுற்றவர் என்ற அடிப்படையில் சோதிநாதனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. ஒரு தொகுதியில் தோல்வி கண்ட வேட்பாளரை மறுமுறை அதே தொகுதியில் நிறுத்துவதில்லை என்ற கொள்கையை தேசிய முன்னணி தலைமைத்துவம் தற்போது தீவிரமாகக் கடைப்பிடித்து செயல்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

ஆனால் முருகேசனும், சுபாங் தொகுதியில் தோல்வி கண்டவர்தான். ஆனால் இந்த முறை சுபாங் தொகுதியிலிருந்து இடம் மாறி தெலுக் கெமாங் தொகுதிக்கு வருகின்றார்.

தெலுக் கெமாங் தொகுதியில் நிகழ்ந்து வரும் அரசியல் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது அப்படியே முருகேசன் தெலுக் கெமாங் தொகுதியில் நிறுத்தப்பட்டால் அதனால் உள்ளூர் ம.இ.காவில் கடுமையான பிளவுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.