Home இந்தியா எல்லை பிரச்னைக்கு தீர்வு காண மன்மோகன், லீ கேகியாங் உறுதி

எல்லை பிரச்னைக்கு தீர்வு காண மன்மோகன், லீ கேகியாங் உறுதி

377
0
SHARE
Ad

manmohan-singhபுதுடெல்லி, மே 21-  எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என இந்திய, சீன பிரதமர்கள் உறுதி அளித்துள்ளனர். இருநாடுகள் இடையே நேற்று 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

சீனப் பிரதமர் லீ கேகியாங் தலைமையிலான குழுவினர் 3 நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தனர். அவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் இரவு விருந்தளித்தார்.

லீ கேகியாங்குக்கு ஜனாதிபதி மாளிகையில் நேற்று அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து, இந்தியா,சீனா குழுக்கள் இடையே விரிவான பேச்சுவார்த்தை நடந்தது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்குபின், இருவரும் கூட்டாக அளித்த பேட்டியில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:

#TamilSchoolmychoice

இந்தியா,சீனா இடையே வேறுபாடுகள் இருந்தது. ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக இருநாடுகளும் உறவை பலப்படுத்தி வருகின்றன. எல்லைப் பிரச்னையை தீர்க்க ஒப்பந்தம் செய்வது குறித்து கூட்டுக் குழுவை உருவாக்க இருதரப்புமே விருப்பம் தெரிவித்துள்ளது. இருதரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் நியாயமான ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த இருநாட்டு பிரதிநிதிகளும் விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்த ஒப்புக் கொண்டுள்ளோம்.

திபெத்தில் உருவாகும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, 3 நீர் மின்சக்தி அணைகள் கட்ட சீனா திட்டமிட்டுள்ளதால் ஏற்படும் நதிநீர் பங்கீடு பிரச்னை குறித்தும் லீயிடம் வலியுறுத்தினேன். இந்த விஷயத்தில் இணக்கமாக செயல்பட இருதரப்பும் ஒத்துக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார். சீனப் பிரதமர் லீ அளித்த பேட்டியில், ‘‘எல்லைப் பிரச்னை ஆண்டாண்டு காலமாக நீடிக்கும் அச்சுறுத்தல். இதைத் தீர்க்க இரு தரப்பும் விரும்புகிறது. இதற்காக புதிய விதிமுறைகளை வகுத்துள்ளோம். வேறுபாடுகளை போக்கி இருநாடுகளும் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும். இந்தியா,சீனா நல்லுறவு நிலவுவது ஆசிய கண்டத்துக்கும், உலகுக்கும் நல்லது.

எனது இந்த பயணத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாம் விதைகள். இது வளர்ந்து மரமாகி எதிர்காலத்தில் சிறந்த பலனை அளிக்கும். இந்தியாவுடனான ஒத்துழைப்பை தீவிரப்படுத்த, இருதரப்பு நம்பிக்கையை 3 மடங்காக உயர்த்த வேண்டும் என்பதுதான் எனது இந்தியப் பயணத்தின் நோக்கம். இந்தியப் பிரதமரின் சீன பயணத்தை இந்தாண்டு இறுதியில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.

வேளாண்மை, வர்த்தகம், சுற்றுலா மற்றும் பிரம்மபுத்ரா நதிநீர் பங்கீடு உட்பட 8 ஒப்பந்தங்கள் இருநாடுகள் இடையே கையெழுத்தானது. வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பா.ஜ மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரையும் லீ சந்தித்து பேசினார்.