Home கலை உலகம் ரூ.19 கோடி மோசடி வழக்கில் கைதான நடிகை லீனா மரியாபாலை சென்னை கொண்டு வர முடிவு

ரூ.19 கோடி மோசடி வழக்கில் கைதான நடிகை லீனா மரியாபாலை சென்னை கொண்டு வர முடிவு

640
0
SHARE
Ad

leena-paulசென்னை, மே 29- டெல்லியில் மோசடி வழக்கில் கைதான நடிகை லீனா மரியா பாலை போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர். இன்று மாலை விமானம் மூலம் கொண்டு வருகிறார்கள். சென்னையில்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

லீனா மரியாபால் 50 வயதான நடிகர் மோகன் லாலூடன் “ரெட்சில்லீஸ்” என்ற படத்தில் நடித்தவர். ஹஸ்பண்ட்ஸ், இன்கோவா, கோப்ரா படங்களிலும் நடித்துள்ளார். இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமுடன் மெட்ராஸ் கபே படத்திலும் நடித்துள்ளார்.

இவர் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். 25 வயதாகிறது. லீனா மரியாபாலும், சுகாஷ் சந்திரசேகர் என்பவரும் வங்கிகளில் பல கோடி மோசடி செய்துள்ளதை போலீசார் சமீபத்தில் கண்டுபிடித்தனர். இருவரும் தங்களை கணவன்-மனைவி என கூறிக்கொண்டனர்.

#TamilSchoolmychoice

சுகாஷ் சந்திரசேகர் அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில் தொழில் செய்யப்போவதாக கூறி ரூ.19 கோடி கடன் வாங்கியுள்ளார். லீனா மரியாபால் தன்னை சுகாஷ் சந்திரசேகர் மனைவி என கூறிக்கொண்டு ஒரு வங்கியில் ரூ.65 லட்சம் கடன் பெற்றுள்ளார். பின்னர் இருவரும் தலை மறைவாகி விட்டார்கள்.

இதுகுறித்து கனரா வங்கி அம்பத்தூர் கிளை சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. சுகாஷ் சந்திரசேகர், லீனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறிக்கொண்டு லீனாவுடன் மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது டெல்லியில் அசோலா என்ற இடத்தில் ஒரு பண்ணை வீட்டில் இருவரும் தங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் டெல்லி சென்று பண்ணை வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து லீனா மரியா பாலையும் அவரது பாதுகாவலர்கள் 4 பேரையும் கைது செய்தனர். சுகாஷ் சந்திரசேகர் தப்பி ஓடிவிட்டார்.

பண்ணை வீட்டில் இருந்து 9 ஆடம்பர கார்கள், 8 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டன. இருவரும் அந்த பண்ணை வீட்டுக்கு மாதம் ரூ.4 லட்சம் வாடகை பேசி குடிவந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

லீனாவும் அவரது பாது காவலர்களும் துப்பாக்கிகள் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆயுத சட்டத்தின் கீழும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் லீனா விடம் விசாரணை நடத்திய பிறகு மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.