Home நாடு அல்தான்துயா கொலை வழக்கு: தீர்ப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்ய சிருலுக்கு நீதிமன்றம் அனுமதி

அல்தான்துயா கொலை வழக்கு: தீர்ப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்ய சிருலுக்கு நீதிமன்றம் அனுமதி

520
0
SHARE
Ad

Altantunya-Feature

கோலாலம்பூர், ஜூன் 10 –  மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் கொலை வழக்கை ‘தவறான விசாரணை’ என அறிக்க வேண்டும் என்று கூறி முன்னாள் காவல்துறை அதிரடிப்படை அதிகாரி சிருல் அஸ்ஹார் உமர் சார்பாக தாக்கல் செய்திருந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதோடு 10 நாட்களுக்குள் மேல்முறையீடு தொடர்பான மனுவை சிருல் தரப்பு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் அபாண்டி அலி, லிண்டன் ஆல்பர்ட், தெங்கு மைமூன் துவான் மாட் ஆகியோர் அவரது வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த மனு மீதான விசாரணை வரும் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இம்மனு குறித்து துன் அப்துல் மஜீட் ஹாம்ஸா தலைமையிலான அரசு தரப்பு எந்த ஒரு ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் கமருல் ஹிசாம் கமாருடின் தலைமையிலான எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் குழு பின்வரும் காரணங்களின் அடிப்படையில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யவுள்ளது.

அதன்படி, முதல் விசாரணையில், தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரணியம் மற்றும் வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடின் ஆகியோர் அளித்த சத்தியப்பிரமாணத்தில், தங்கள் கட்சிக்காரருக்கு எதிரான அநீதியான செய்திகள் பரப்பப்பட்டன என்றும்,

இந்த சத்தியப் பிரமாணத்தில் தங்கள் கட்சிக்காரருக்கு எதிரான அநீதியான செய்திகள் பரப்பப்பட்டதை, வழக்கை விசாரணை செய்த நீதிபதியும் அறிந்திருக்கலாம் என்றும், அது அவரது தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இது குறித்து கமருல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த எதிர்மறையான செய்திகளின் காரணமாக உயர்நீதிமன்றத்தில் பாரபட்சமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்

அல்தான்துயாவை கொன்றதாக முன்னாள் காவல்துறை அதிரடிப்படை அதிகாரி சிருல் அஸ்ஹார் உமர் மற்றும் முன்னாள் தலைமை காவதுறைக் கண்காணிப்பாளர் அஸிலா ஹட்ரி ஆகியோருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.