Home கலை உலகம் கவிஞர் வாலி மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

கவிஞர் வாலி மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

962
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 19- கவிஞர் வாலி மறைவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

விஜயகாந்த்
vijaykanth-slidder
தே.மு.தி.க, தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:– திரையுலக ஜாம்பவான் பிரபல பாடலாசிரியர் கவிஞர் வாலி நேற்று உடல்நலகுறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ்த்திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உட்பட அனைத்து பிரபலங்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் நான் நடித்த ஏழை ஜாதி, ஆனஸ்ட்ராஜ், பாட்டுக்கொருதலைவன், திருமூர்த்தி, பொன்மனச்செல்வன் உள்ளிட்ட பல படங்களில், பல பாடல்களை எழுதியுள்ளார்.

#TamilSchoolmychoice

கவிஞர் வாலியின் இழப்பு, ஈடு செய்ய முடியாத இழப்பு. தமிழ் உலகுக்கு மட்டுமல்ல, திரை உலகிற்கும், என் போன்றவர்களுக்கும் இது எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அவரை இழந்து துயருரும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழுலகம் போற்றும் சிறந்த கவிஞர்களில் வாலியும் ஒருவர். தத்துவ பாடல்களை எழுதுவதில் முத்திரைப்பதித்தவரான அவர் துள்ளல் பாடல்களையும் எழுதியிருக்கிறார். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய சாதனைக்கு சொந்தக்காரர்.

திரைப்பாடல்களை எழுதியவர் என்பதைத் தாண்டி ஏராளமான கவிதை நூல்களையும், உரைநடை நூல்களையும் எழுதிய எழுத்தாளர், சிறந்த ஓவியர், திரைப்பட நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத்துரையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

வைகோ
4-30-2011-17-vaiko--in-person-advocates-ste
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:– வாலி மறைந்தார் என்ற செய்தியை கேட்டமாத்திரத்தில் இதயம் வலியால் துடித்தது.

1964–ம் ஆண்டு, சென்னை மாநகருக்கு வந்த முதல் நாளிலேயே, கவிஞர் வாலியை சந்திக்கும் பேறு பெற்றேன்.

‘படகோட்டி’ திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களை என்னிடம் அவர் காட்டியபோது, மெய்சிலிர்த்து நான் பாராட்டியதையும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 2004–ம் ஆண்டு, நதிநீர் இணைப்பு, மது ஒழிப்பு பிரசாரத்தை மேற்கொண்டு, திருநெல்வேலியில் இருந்து சென்னைவரையிலும் நான் மேற்கொண்ட மறுமலர்ச்சி நடைபயண நிறைவு விழாவில், தீவுத்திடலுக்கு வந்து, நெடிய வாழ்த்துக்கவிதை வழங்கியதையும் எப்படி மறப்பேன்? ‘அவதார புருஷன், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம்’ என இதிகாச காவியங்களை கவிதைகள் ஆக்கித்தந்தார். அவரது மறைவை கேட்டு கலங்கும் நெஞ்சுடன் என் கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான கருத்தாழக்கவிஞர் வாலி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகப்பெரும் அதிர்ச்சியை தந்தது.

சில நாட்களுக்கு முன்கூட அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது, இன்முகத்தோடு அப்பொழுது வரவேற்ற அவர் தம் பண்பும், பாசமும் கொள்கை வேறுபாடு உள்ள நம்மைப்போன்றவர்களிடம் கூட அகநக நட்புடன் பழகிய பாங்கும் எப்போதும் மறக்க இயலாது.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கலை உலகத்தாருக்கும் திராவிடர் கழகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.