Home கலை உலகம் “தலைவா” படம் பலத்த பாதுகாப்புகளுடன் தமிழகத்தில் திரையீடு! மலேசியாவிலும் திரையிடப்பட்டது.

“தலைவா” படம் பலத்த பாதுகாப்புகளுடன் தமிழகத்தில் திரையீடு! மலேசியாவிலும் திரையிடப்பட்டது.

775
0
SHARE
Ad

Thalaiva-Poster---Featureஆகஸ்ட் 9 – பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் நடித்த “தலைவா” தமிழ்த் திரைப்படம் இன்று தமிழகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்புகளுடன் திரையீடு காண்கின்றது.

#TamilSchoolmychoice

சில நாட்களுக்கு முன்பாகவே இந்த படத்திற்கான நுழைவுச் சீட்டுகள் (டிக்கட்) பரபரப்பாக விற்பனையாகி வந்தன. இந்தப் படம் மிகப் பெரிய வசூலைக் குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இடையில் இந்தப் படத்திற்கான நுழைவுச் சீட்டு விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சில அரசியல் இயக்கங்கள் இந்தப் படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதே இதற்குக் காரணமாகும்.

திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அதோடு, படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால், திரையரங்கு அதிபர்கள் பலத்த காவல்துறை பாதுகாப்பு இருந்தால்தான் படத்தை திரையிடுவோம் என கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் விஜய் நடித்த தலைவாபடம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைவாபடம் இன்று தமிழகத்தின் 500 அரங்குகளில் வெளியிடப்படுகிறது. உலகெங்கிலும் ஒரே நேரத்தில் திரையிடப்படுவதோடு, நேற்று மலேசியாவிலும் இந்தப் படம் திரையீடு கண்டது.

இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டரில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்க நிர்வாகிக்கு நேற்று வெகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப்படை என்ற அமைப்பின் பெயரில் வந்துள்ள அந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரங்குகளுக்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு

இதைத் தொடர்ந்து, ‘தலைவாபடம் திரையிடப்படவுள்ள சத்யம் எஸ்கேப், தேவி பாரடைஸ், உட்லண்ட்ஸ், ஆல்பர்ட், அபிராமி 7 ஸ்டார், சங்கம் உள்பட சென்னையில் படம் வெளியிடப்பட உள்ள அனைத்து அரங்குகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திரையரங்குகளைச் சுற்றி போலீஸ் வாகன ரோந்து மற்றும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளின் அருகில் சந்தேகப்படும்படியாக யாராவது சுற்றி திரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு திரையரங்குகளின் நிர்வாகத்துக்கு காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு, படம் வெளியிடப்படும் இன்று மேலும் அதிகரிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை திரையரங்குகளின் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து தியேட்டர் அதிபர்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனாலும் தலைவாபடம் நிச்சயம் வெளியீடு காணும். இதில் சந்தேகம் இல்லை” என்று கூறியுள்ளார்.