Home இந்தியா இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை மந்திரியிடம் பிரதமர் வலியுறுத்தல்

இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை மந்திரியிடம் பிரதமர் வலியுறுத்தல்

450
0
SHARE
Ad

புதுடெல்லி, ஆக. 20- இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்து, உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை மந்திரியிடம் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதங்கள் எழுதியுள்ளார்.

Manmohan Singhபல்வேறு கட்சிகளும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி உள்ளன. டெல்லியில் உள்ள இலங்கை தூதரையும் இந்திய வெளியுறவுத்துறை அழைத்து இதனை வலியுறுத்தியது. இந்த நிலையில் பிரதமரை சந்தித்த இலங்கை மந்திரி பெரீசிடமும் இந்த பிரச்சினை வலியுறுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

காமன்வெல்த் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்க இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை இலங்கை வெளியுறவு மந்திரி பெரீஸ் சந்தித்தார். அவரது அழைப்புக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

அப்போது பிரதமர் மன்மோகன்சிங், கடந்த சில நாட்களாக இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அவர்களை விடுவிக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை மந்திரியிடம் வலியுறுத்தினார். அதோடு இந்த மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் நடைபெற உள்ள வடக்கு மாகாண தேர்தல் குறித்தும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த தேர்தல் ஒரு சமரச இணக்கத்தை ஏற்படுத்த உதவும் என்றும், தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்று தான் நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த இலங்கை மந்திரி பெரீஸ், இப்போது தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக நடந்து வருவதாகவும், பல்வேறு கட்சிகளை சேர்ந்த 350 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாகவும் கூறினார். தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும், தேர்தலை கண்காணிக்க காமன்வெல்த், சார்க் போன்ற அமைப்புகளில் இருந்து பார்வையாளர்கள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை 13–வது சட்டதிருத்தத்தை நீர்த்துப்போக செய்யாமல், அதனை முன்னெடுத்துச்செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

பின்னர் இலங்கை மந்திரி பெரீஸ், இந்திய வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித்தை சந்தித்து பேசியபோதும், தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக இந்திய–இலங்கை மீனவர் சங்கத்தினர் சந்தித்து பேசுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் பல்வேறு ஒத்துழைப்பு குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும், இலங்கையில் சம்பூர் மின்நிலையம் குறித்தும் பேசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.