Home நாடு “இந்திய சமுதாயத்துக்கான நிதி ஒதுக்கீடு தனக்கு வேண்டும் என்றார்” – வேதமூர்த்தி மீது கைரி ஜமாலுடின்...

“இந்திய சமுதாயத்துக்கான நிதி ஒதுக்கீடு தனக்கு வேண்டும் என்றார்” – வேதமூர்த்தி மீது கைரி ஜமாலுடின் குற்றச்சாட்டு

1063
0
SHARE
Ad

Khairy Jamaludin 440 x 215பிப்ரவரி 18 – வேதமூர்த்தி பிரதமர் நஜிப் மீது தொடுத்த தாக்குதலைத் தொடர்ந்து, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரான கைரி ஜமாலுடின் பிரதமரைத் தற்காத்துப் பேசியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தியர்களுக்கென ஒதுக்கப்படுகின்ற நிதிகள் அனைத்தும் தனது மேற்பார்வையில் விநியோகிக்கப்பட வேண்டும் என வேதமூர்த்தி வேண்டுகோள் விடுத்தார் என்றும், ஆனால் அரசாங்கம் அவ்வாறு தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் முறையான வழிமைறைகளின் மூலமாகத்தான் நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் செய்கின்றது என்றும் கைரி தனது ட்விட்டர் வலைத்தளம் மூலம் விளக்கமளித்துள்ளார்.

ஹிண்ட்ராப்புடனான ஒப்பந்தப்படி நடந்து கொள்ள நஜிப் தவறி விட்டார் என்றும். அதன் காரணமாக இந்திய சமுதாயத்திற்கு அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற நஜிப் தவறிவிட்டார் என்றும் அதனால்தான் தான் ராஜினாமா செய்ய நேர்ந்தது என்றும் வேதமூர்த்தி இன்று காலையில் கூறியிருந்தார்.

“அமைச்சுக்களையும், அரசாங்க இலாகாக்களையும் மீறி, இந்திய சமுதாயத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் தனது மேற்பார்வையின் கீழ், தனது விருப்பு வெறுப்புக்கேற்ப நிர்வகிக்கப்பட வேண்டும் என்று வேதமூர்த்தி கோரிக்கை விடுத்தார். ஆனால், அரசாங்கம் அவ்வாறு செயல்படுவதில்லை” என கைரி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“தனது கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால், ராஜினாமா செய்து விட்டு பழியை நஜிப் மீது சுமத்தியுள்ளார்” என்றும் கைரி கூறியுள்ளார்.

“தான் மேற்கொள்ள முடியாத மாற்றங்களுக்காக வேதமூர்த்தி பிரதமரைக் குறை கூறக் கூடாது. வேதமூர்த்தி ஒரு குழுவின் விளையாட்டாளர்களில் ஒருவர் போல நடந்து கொள்ளவில்லை என்பதோடு, தனது கோரிக்கையை செயலாக்க போதிய வலுவான அணுகுமுறையைக் கையாளவில்லை” என்றும்  கைரி கூறியுள்ளார்.

“வேதமூர்த்தி இல்லாவிட்டாலும் அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு உதவும்”

வேதமூர்த்தி அமைச்சரவையில் இல்லாவிட்டாலும் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியிலும் அந்த சமுதாயத்தின் கல்வி, வறுமை போன்ற விவகாரங்களிலும் அரசாங்கம் முழுமையான கடப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் கைரி உறுதியளித்தார்.

“வேதாவை எனக்குத் தெரியும். நான் இதனை வெளியே சொல்லக் கூடாதுதான். ஆனால், நியாயமில்லாத முறையில் தவறுகளை பிரதமர் மீது சுமத்தினால் எனக்கு வேறு வழியில்லை. இதுதான் கூட்டு அமைச்சரவை பொறுப்பாகும்” என்றும் கைரி தெரிவித்துள்ளார்.