Home இந்தியா நமது ஆட்சியமைந்தால் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் – ஜெயலலிதா!

நமது ஆட்சியமைந்தால் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் – ஜெயலலிதா!

433
0
SHARE
Ad

04-jayalalitha-new-photo-600நாகை, மார்ச் 7 – அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் ஆட்சி மத்தியில் அமைந்தால் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே.பாரதிமோகனை ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக காளகஸ்திநாதபுரத்திற்கு வந்தார்.

பின்னர் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே.பாரதிமோகனை ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் என்னென்ன பிரச்சனைகளுக்கு நீங்கள் ஆளாகி இருக்கிறீர்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதுதல்ல.

விலைவாசி உயர்வு, பண வீக்கம், இந்திய ரூபாயின் தொடர் வீழ்ச்சி, மாதா மாதம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலை வாய்ப்பின்மை, தொழில் வளர்ச்சியின்மை, வேளாண் உற்பத்தியில் மந்த நிலை என மத்திய காங்கிரஸ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

#TamilSchoolmychoice

இப்படி எல்லா விதத்திலும் சாமானிய மக்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் சில மாதங்களுக்கு முன்பு வரை அங்கம் வகித்த கட்சி தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில், ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு 2–ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னின்று நடத்தியது தி.மு.க.

இப்படி காங்கிரசும், தி.மு.க.வும் சேர்ந்து சாமானிய ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எதிராக செயல்பட்டதன் காரணமாக நாட்டின் பொருளாதாரமே நிலைகுலைந்துவிட்டது. இப்படிப்பட்ட கொடுங்கோல் அரசிடமிருந்து இந்திய நாட்டை காப்பாற்றுவதற்கான தருணம் வந்துவிட்டது. தமிழ் நாட்டிற்கு தேவையானவற்றை மத்திய அரசிடமிருந்து பெறக்கூடிய காலம் கனிந்துவிட்டது.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள உங்கள் வாக்குரிமையை நீங்கள் தமிழக மக்களின் நலனுக்காக செயல்படும் அ.தி.மு.க.வுக்கு வழங்க வேண்டும். நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல, மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். மத்தியில் மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது.

அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்போது தான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படும். தமிழ்நாட்டு மக்களின் வாழ்வு வளம் பெறும்.

அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் இந்தியாவை வழி நடத்தி செல்ல மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஆர்.கே.பாரதிமோகனுக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து அவரை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும் என முதல்–அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.