Home நாடு MH370: விமானத்தின் பொருட்கள்தான் என்பது உறுதியானால் பயணிகளின் உறவினர்களை மாஸ் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லும்!

MH370: விமானத்தின் பொருட்கள்தான் என்பது உறுதியானால் பயணிகளின் உறவினர்களை மாஸ் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லும்!

417
0
SHARE
Ad

MAS logo 440 x 215மார்ச் 20 – ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் கடலில் மிதக்கும் பொருட்கள் காணாமல் போன மாஸ் விமானம் சம்பந்தப்பட்டவை என்பது உறுதியானால், பயணிகளின் உறவினர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல மாஸ் விமான நிறுவனம் தயாராகி வருகின்றது.

#TamilSchoolmychoice

காணாமல் போன விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு மாஸ் எப்போதுமே முக்கியத்துவம் வழங்கும் என்று குறிப்பிட்ட மாஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அகமட் ஜவுஹாரி யாஹ்யா, ஆஸ்திரேலியா கடல் பகுதியில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டால், பயணிகள் மற்றும் பணியாளர்களின் உறவினர்களை ஆஸ்திரேலியாவுக்கு மாஸ் அழைத்துச் செல்லும் என உறுதியளித்தார்.

பயணிகளுக்கு நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் தேடுதல் குறித்த விளக்கங்கள் தரப்படுகின்றன என்றும் அகமட் ஜவுஹாரி குறிப்பிட்டார்.

தகவல்கள் பயணிகளுக்குத்தான் முதலில் தெரிவிக்கப்படும்….

இதற்கிடையில், தேடுதல் வேட்டையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டால், தகவல்கள் ஏதும் கிடைத்தால் முதலில் பயணிகளுக்குத்தான் தெரிவிக்கப்படும் என்று இடைக்கால போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் தெரிவித்துள்ளார்.

கடும் மன உளைச்சலுக்கும் சோகத்துக்கும் ஆளாகியுள்ள பயணிகளின் குடும்ப உறுப்பினர்களை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் அதனால்தான் பிரெஞ்சு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு இலாகாவின் அதிகாரிகளைத் தாங்கள் வரவழைத்ததாகவும் ஹிஷாமுடின் கூறினார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் 447இன் விமானப் பாகங்களும், அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியும் சுமார் 2 வருடங்களுக்குப் பின்னர்தான் கடலுக்கடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த 228 பேரும் மரணமடைந்தனர்.

இடைப்பட்ட இரண்டு ஆண்டு கால இடைவெளியில் அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினரை பிரெஞ்சு அதிகாரிகள் எவ்வாறு சமாளித்தார்கள், எப்படி தொடர்புகளை அணுக்கமாக வைத்திருந்தார்கள் போன்ற அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் தற்போது கோலாலம்பூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடனும் தான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக ஹிஷாமுடின் கூறியுள்ளார்.

சீனாவில் உள்ள பயணிகளின் உறவினர்களோடு முன்னாள் மசீச தலைவரும் சீனாவுக்கான மலேசியப் பிரதரின் சிறப்புத் தூதருமான ஓங் கா திங்  தலைமையில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ஹிஷாமுடின் அறிவித்துள்ளார்.