Home நாடு துணைத் தலைவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள காலிட்டுக்கு அன்வார் தரப்பில் நெருக்குதல்!

துணைத் தலைவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள காலிட்டுக்கு அன்வார் தரப்பில் நெருக்குதல்!

540
0
SHARE
Ad

Selangor-Khalid-Anwar-300x202கோலாலம்பூர், மே 10 – நடைபெற்று வரும் பிகேஆர் தேசியத் துணைத் தலைவருக்கான போட்டியிலிருந்து சிலாங்கூர் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் விலகிக் கொள்ள வேண்டும் என அன்வார் இப்ராகிம் தரப்பிலிருந்து அவருக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த வியாழக்கிழமை இரவு புக்கிட் சிகாம்புட்டிலுள்ள அன்வார் இல்லத்தில் ஒரு ரகசிய சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் அச்சந்திப்பில் காலிட் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள அவருக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்தக் கூட்டத்தில் அன்வாரின் மனைவி வான் அஸிஸா, அவரின் புதல்வி நூருல் இசா, உதவித் தலைவர் தியான் சுவா, சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா, முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் சையட் ஹூசேன் அலி ஆகியோரும் கலந்து கொண்டனர் என்று தெரிகிறது.

#TamilSchoolmychoice

ஆனால், காலிட் இப்ராஹிம் தான் இறுதி வரைப் போராடப் போவதாகவும் போட்டியிலிருந்து விலகப் போவதில்லை என்றும் உறுதியாகத் தெரிவித்து விட்டதாகவும் பிகேஆர் வட்டார தகவல்கள் தெரிகின்றன.

தற்போது அஸ்மின் அலி துணைத் தலைவர் போட்டியில் முன்னணி வகிப்பதால் காலிட் இப்ராகிமை விலகிக் கொள்ள சொல்வதன் மூலம் மற்றொரு போட்டியாளரான நசுத்தினை வெல்ல வைக்க முடியும் என்று அன்வார் தரப்பு நம்புவதாகவும் பிகேஆர் வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும் தனது முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ள காலிட் இப்ராஹிம் அன்வார் இல்லத்தில் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிவிட்டார்.

அப்படி காலிட் இப்ராகிம் போட்டியிலிருந்து விலகிக்கொண்டால் இந்த முழு தவணையும் அவரே மந்திரி புசாராக தொடர்வதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற நெருக்குதலும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிகேஆர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.