Home நாடு MH370: தேடும் பணியில் சில தவறுகள் நடந்துவிட்டன – நஜிப் ஒப்புதல்

MH370: தேடும் பணியில் சில தவறுகள் நடந்துவிட்டன – நஜிப் ஒப்புதல்

686
0
SHARE
Ad

PX*293005பெட்டாலிங் ஜெயா, மே 14 – மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 மாயமானதில் இருந்து இந்த உலகம், குறிப்பாக விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் நிறைய பாடம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி நிறுவனத்திற்கு நஜிப் அனுப்பிய கடித்தத்தில், விமானத்தைத் தேடுவதில் மலேசியா தன்னால் இயன்ற அளவு முயற்சிகளை செய்தது என்றும், 26 நாடுகளின் உதவியுடன் விமானப் போக்குவரத்து வரலாற்றில் இல்லாத அளவிற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எல்லாவற்றையும் சரியாக செய்ததாகக் கூறவில்லை என்றும் கூறிய நஜிப், விமானம் காணாமல் போன முதல் சில நாட்களில் தேடும் பணியில் சில தவறுகள் நடந்துவிட்டதையும் ஒப்புக்கொண்டார்.

#TamilSchoolmychoice

முதல் சில நாட்களில் காணாமல் போன விமானத்தைத் தேடுவதிலேயே முழு கவனமும் செலுத்திவிட்டதாகவும், அந்த நேரத்தில் தகவல் தொடர்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

விமானம் ரேடார் தொடர்பில் இருந்து விடுபட்டு 4 மணி நேரங்களுக்குப் பிறகு தான் மலேசிய விமானப் போக்குவரத்து கண்காணிப்பாளர்கள் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர். இந்த காலதாமதம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு, தேடுதல் பணியில் செய்த தவறுகள் குறித்து பாடம் கற்றுக் கொள்ளப்படும் என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி, 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற மாஸ் விமானம் புறப்பட்ட 1 மணி நேரத்தில் ரேடார் தொடர்பில் இருந்து விடுபட்டது. அதன் பின்னர் இன்று வரை விமானம் குறித்த எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.