Home நாடு ராயரை கண்டித்து குவாந்தான் ஜசெக அலுவலகத்திலும் தாக்குதல்!

ராயரை கண்டித்து குவாந்தான் ஜசெக அலுவலகத்திலும் தாக்குதல்!

422
0
SHARE
Ad

UMNO-Youth-DAP-HQகோலாலம்பூர், மே 23 – கடந்த இரண்டு நாட்களாக பினாங்கு மற்றும் கோலாலம்பூர் ஜசெக அலுவலகத்தை அம்னோ இளைஞர் மற்றும் மலாய் அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சிலர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, இன்று குவாந்தான் ஜசெக அலுவலகத்திலும் அது போன்ற தாக்குதல் நடந்தது.

அவர்கள் அனைவரும் ஜசெக ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ஜசெக அலுவலகத்தின் முன் கதவை சேதப்படுத்தியதோடு பெயர் பலகையின் மீது முட்டைகளை வீசினர்.

அவர்களை கையில் வைத்திருந்த பதாகைகளில் “மலாய்காரர்களை பகைத்துக் கொள்வதன் மூலம் நெருப்புடன் விளையாடாதே” என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

ஆர்.எஸ்.என்.ராயர் உடனடியாக தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டதாக பிகேஆர் செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சியான் சங்கின் உதவியாளரான கமருல் தெரிவித்தார்.

அம்னோவை “செல்லாக்கா” என்று கூறிய ஆர்.எஸ்.என்.ராயர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடந்த இரண்டு நாட்களாக அம்னோ பிரிவினர் ஜசெக அலுவலகங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.DAP1

டிஏபி தலைமையகம் ராயர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டிஏபி கட்சி இனவாதத்தைத் தூண்டும் கட்சியாக இருக்கிறது என்றும் மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.என். ராயர்,  தம் மீது அம்னோ பிரிவினர் வீணாக அவதூறு பரப்பியுள்ளனர் என்றும், தான் அம்னோ உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது” என்று கூறியுள்ளார்.

அம்னோவை நோக்கி  “செல்லாக்கா” சொல்லைப் பயன்படுத்தவில்லை என்று உறுதியாக ராயர் தெரிவித்துள்ளார்.

கப்பளா பத்தாஸ் எம்.பி.யையும் மேலும் இரு அம்னோ தலைவர்களையும் கண்டிக்கவே தான் அச்சொல்லை பயன்படுத்தியதாக ராயர் தெரிவித்தார். 

மேலும் நேற்று முன்தினம் பினாங்கு சட்டமன்றத்திற்கு வெளியே தனக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தை கருதி ஜெலுத்தோங் போலீசிலும் ராயர் புகார் செய்துள்ளார்.