Home இந்தியா ஊழல், வறுமையை ஒழிக்க நடவடிக்கை: பிரணாப் முகர்ஜி உரைக்கு விஜயகாந்த், ராமதாஸ் வரவேற்பு!

ஊழல், வறுமையை ஒழிக்க நடவடிக்கை: பிரணாப் முகர்ஜி உரைக்கு விஜயகாந்த், ராமதாஸ் வரவேற்பு!

594
0
SHARE
Ad

vijayakanthசென்னை, ஜூன் 10 – ஊழல் ஒழிப்பு, கறுப்புப் பணம் மீட்பு, வறுமை ஒழிப்பு என மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் குடியரசுத் தலைவர் உரை அமைந்துள்ளது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,”நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரையில், வளமான இந்தியாவை உருவாக்க, பல மக்கள் நலத்திட்டங்கள் இடம் பெற்றிருப்பதை தே.மு.தி.க. சார்பில் வரவேற்கிறேன்.

குடியரசுத் தலைவர் உரையில் இந்திய மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்ற ஊழலை ஒடுக்குவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் உறுதியான நடவடிக்கைகள் குறித்து அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

#TamilSchoolmychoice

கருப்பு பணத்தை மீட்கவும், சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு பெற்றுத்தரவும், சமூகத்தில் அனைவருக்கும் சிறப்பான கல்வி கொடுக்கும் பொருட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். அமைக்க இருப்பதும், விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்கும் பொருட்டு, விவசாயம் லாபம் மிக்க தொழிலாக மாற்றுவதற்கு வழிவகை செய்ய இருப்பதும்.

பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தி நாடு முழுவதும் தொழில் பூங்காக்களை அமைத்தல், சரக்கு போக்குவரத்திற்கான தனி பாதைகள் அமைக்கப்படுதல், ரயில் பாதைகளை மேம்படுத்துவதற்கு வைர நாற்கர ரயில் திட்டம் அறிவித்திருப்பதும்,

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் நிலைமை சீர்படும் என்ற மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக சிறிய அரசு, சிறந்த நிர்வாகம் என்ற சிறந்த கொள்கையுடன் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் குடியரசுத் தலைவர் உரை அமைந்துள்ளது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சி பொற்கால ஆட்சியாக மலரும் என்ற நம்பிக்கையை நம் எல்லோருக்கும் தரும் விதத்தில் குடியரசுத் தலைவர் உரை அமைந்துள்ளதை தே.மு.தி.க. சார்பில் மனமுவர்ந்து வரவேற்கிறேன்” என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

Pranab-Mukherjeeஇதேபோல குடியரசுத் தலைவர் உரை, இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவி ஏற்றிருப்பதையடுத்து, நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

கிராமப்புற வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும், ஊரக-நகர்ப்புற இடைவெளியை குறைக்க ‘ஊரக நகரங்கள்’ உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டத்தக்கவை.

இதன்மூலம் கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம் பெயருவதை தடுக்க முடியும். ஊரக நகரங்கள் திட்டப்படி கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும்போது, கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

‘ஒத்துழைப்பான கூட்டாட்சி’ மூலம் மாநிலங்களின் வளர்ச்சிக்கு உதவி செய்தல், தேசிய வளர்ச்சிக்குழு உள்ளிட்ட அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவை உன்னதமான அறிவிப்புகள்.

பொதுவினியோகத் திட்டத்தை வலுப்படுத்த மாநில அரசுகள் கடைபிடித்துவரும் சிறந்த நடைமுறைகளை மத்திய அரசு பின்பற்றும் என்று அறிவித்திருப்பதன் மூலம் மாநில அரசுகளின் எஜமானனாக இல்லாமல் நண்பனாக இருப்போம் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.

அதேபோல், வறுமை ஒழிப்பு, பட்டினியை ஒழிக்கும் வகையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், விலைவாசி குறைப்பு ஆகியவை ஏழை மக்களின் வயிற்றில் பால் வார்க்கும் அறிவிப்புகள் ஆகும்.

அதேநேரத்தில் அனைத்து மாநில மாணவர்களுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், இத்தகைய கல்வி நிறுவனங்களை அமைப்பதில் மாநில அரசுகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இவற்றில் சரிபாதி இடங்களை மாநில ஒதுக்கீடாக அறிவிக்க வேண்டும்” எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.