Home நாடு காலஞ்சென்ற கர்ப்பாலுக்கு பொதுச் சேவை விருது – காந்தி அறவாரியம் வழங்குகின்றது.

காலஞ்சென்ற கர்ப்பாலுக்கு பொதுச் சேவை விருது – காந்தி அறவாரியம் வழங்குகின்றது.

457
0
SHARE
Ad

karpalகோலாலம்பூர், ஜூன் 26-ஜசெக மூத்த தலைவர் கர்ப்பால் சிங், காலமானாலும், நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவைகள் என்றும் நினைவுக்கூரப்படும் என்றும் அவர் 40 ஆண்டுகள் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக அவருக்கு பொதுச் சேவை விருதளித்துச் சிறப்பிக்கப்படும் என்றும் காந்தி அறவாரியம் அறிவித்துள்ளது.

ஜூன் 30இல், கோலாலம்பூர் அரச சிலாங்கூர் கிளப்பில் ஒரு சிறப்பு நிகழ்வில் அந்தப் பொதுச் சேவை விருது வழங்கப்படும் என்று ஜிஎம்டி தலைவர், வழக்கறிஞர் எஸ்.இராதாகிருஷ்ணன் கூறினார்.

ஜசெகவின் முன்னாள் தேசியத் தலைவரும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான கர்பால், சிறந்த வழக்குரைஞர், நேர்மையான  அரசியல்வாதி, எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மனிதாபிமானி என்று இராதாகிருஷ்ணன் புகழ்ந்துரைத்தார்.

#TamilSchoolmychoice

“சமூக நீதியை நிலைநிறுத்துவது, சட்டத்தையும், மலேசிய அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பது – இவைதான் கர்ப்பால் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்த கொள்கைகளாகும். தேசியச் சொத்தான அவரும் அவரும் சேவைகளும், அவரது பங்களிப்பும், தியாகங்களும், மலேசியா நாம் அனைவரும் சிறப்பான முறையில் வாழ பொருத்தமான நாடாக உருமாற்ற அவர் வழங்கிய அர்ப்பணிப்பும் என்றும் அனைவராலும் நினைவு கூரப்படும் – போற்றப்படும்” என்றும் இராதாகிருஷ்ணன் கூறினார்.

எதிர்வரும் ஜூன் 30ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில், கர்ப்பாலுக்கு விருது வழங்குவதற்கு முன்னால் கர்ப்பாலின் பல்வேறு பெருமைகளை எடுத்துரைக்கும் வண்ணம் நால்வர் பேச அழைக்கப்பட்டுள்ளனர்.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ மகாதேவ் சங்கர், பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம், மலேசிய வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர் டத்தோ ஜக்ஜிட் சிங் ஆகியோரே அந்த நால்வராவர்.

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தனது 74வது வயதில் கம்பாருக்கு அருகில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில் கர்ப்பால் மரணமடைந்தார்.

ஜூன் 30ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிக்கு அழைப்பின் பேரிலேயே பங்கு பெறுபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அனுமதியைப் பெற radhakrishnan@shearndelamore.com. என்ற இணையத் தள முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.