Home இந்தியா இந்தியாவில் இனி இணையம் மூலம் விசா!

இந்தியாவில் இனி இணையம் மூலம் விசா!

508
0
SHARE
Ad

புதுடெல்லி, நவம்பர் 26 – அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட 43 நாடுகளுக்கு இணையதளம் மூலம் விசா (e-visa) எனப்படும் குடிநுழைவு முன் அனுமதி வழங்கும் திட்டம், இந்தியாவில் வரும் நவம்பர் 27-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக இந்திய சுற்றுலாத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

indian-visa-mar2008

இணையதளம் மூலம் விசா வழங்கும் இந்த முறை முதற்கட்டமாக ரஷ்யா, பிரேசில், ஜெர்மனி, தாய்லாந்து, அரபு நாடுகள், உக்ரைன், ஜோர்டான், நார்வே, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், விரைவில் அமெரிக்கா உள்பட 43 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் இந்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக இந்தியச் சுற்றுலாக் கழகத்தின் தலைவர் சுபாஷ் கோயல் கூறுகையில், “இந்திய சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காக இந்தத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருப்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், கோவா ஆகிய 9 அனைத்துலக விமான நிலையங்களிலும் இந்த புதிய திட்டம் விரைந்து செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள், விமான நிலையத்திலிருந்தபடியே இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இணையத் தளத்தில் கட்டணம் செலுத்தி 4 நாட்களுக்குள் விசா பெற்றுக் கொள்ளலாம்.

தென் கொரியா, ஜப்பான், ஃபின்லாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட 13 நாடுகளுக்கு இந்த திட்டத்தை இந்திய அரசு ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.