Home நாடு உண்ணாவிரதத்தால் எந்தத் தீர்வும் கிடைத்துவிடாது – மோகனா முனியாண்டி

உண்ணாவிரதத்தால் எந்தத் தீர்வும் கிடைத்துவிடாது – மோகனா முனியாண்டி

589
0
SHARE
Ad

mohanaகோலாலம்பூர், ஜனவரி 23 – சங்கப் பதிவிலாகாவின் உத்தரவை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பதால் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு எந்தவித தீர்வும் கிடைத்துவிடாது என மஇகா மகளிர் பிரிவு தலைவி மோகனா முனியாண்டி தெரிவித்துள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், டத்தோ குமார் அம்மான் தடாலடியாக இப்படியொரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசியமென்ன? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தன் பக்கம் வலுவான வாதம் இருப்பதாக குமார் அம்மான் கருதும் பட்சத்தில், அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்திருக்க வேண்டும் என்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டது சரியல்ல என்றும் மோகனா முனியாண்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நாம் இருப்பது இந்தியாவில் அல்ல. இங்கு நாடகம் நடத்த வேண்டியதில்லை. கட்சியில் உள்ள பல்வேறு நிபுணர்களும் கல்வியில் சிறந்தவர்களும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை ஆராயந்துவருகிறார்கள்,” என்றார் மோகனா.

இதற்கிடையே மகாத்மா காந்தியின் அறவழியைப் பின்பற்றியே தாம் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதாக குமார் அம்மான் கூறினார் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

“சங்கப்பதிவிலாகாவே அனைத்து சங்கங்களுக்கும் பொறுப்பேற்றுள்ளது. எனவே அதன் முடிவுகளை ஏற்க மறுப்பது சரியல்ல. கட்சியின் பதவி ரத்தாகிவிடக் கூடாது என்பதே தற்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்,” என்று மோகனா முனியாண்டி மேலும் கூறியுள்ளார்.