Home நாடு பதவியைத் தற்காத்துக் கொள்ளவே குமார் அம்மான் கபட நாடகம் : சரவணன் சாடல்!

பதவியைத் தற்காத்துக் கொள்ளவே குமார் அம்மான் கபட நாடகம் : சரவணன் சாடல்!

554
0
SHARE
Ad

Saravanan-Sliderகோலாலம்பூர், ஜனவரி 24 – குமார் அம்மான் உள்ளிட்ட சிலர் பொதுமக்களை குழப்பி வருவதாக துணையமைச்சர் டத்தோ சரவணன் (படம்) சாடியுள்ளார்.

உண்ணாவிரதம் என்ற போர்வையில் குமார் அம்மான் உள்ளிட்டோர் கபட நாடகம் ஆடுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

நேற்று, வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, குமார் அம்மானுக்கு தலைமைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டதை சங்கங்களின் பதிவிலாகா ஏற்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், அங்கீகரிக்கப்படாத அந்தப் பதவியை எப்படியேனும் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே குமார் அம்மான் உண்ணாவிரதம் மேற்கொண்டதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

Kumar Amman

குமார் அம்மான் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த காட்சி 

“மஇகாவின் சொத்துக்களை மீட்கப் போவதாகக் கூறி குமார் அம்மான் அனைவரையும் திசை திருப்புகிறார். உண்ணாவிரதம் மேற்கொள்வதென்பது அவரது தனிப்பட்ட முடிவு. அதற்கும் மஇகாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. ஏனெனில் இது மஇகா எடுத்த முடிவல்ல. அதே சமயம் மஇகா சொத்துக்களை டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு, டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், டத்தோ சரவணன் ஆகியோரிடம் இருந்து மீட்க வேண்டும் என அவர் கூறியதை ஏற்க இயலாது. ஏனெனில் கட்சியின் சொத்துக்களுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை,” என்றார் சரவணன்.

மஇகா சொத்துக்கள் அனைத்தும் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட அறங்காவலர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவரம் தெரியாமல் குமார் அம்மான் குற்றம்சாட்டி வருவதாகத் தெரிவித்தார்.

குமார் அம்மானுக்கு சட்டம் தெரியவில்லை என்று கூறிய அவர், அதனால்தான் கட்சி சொத்துக்களை மீட்கப் போவதாக விவரம் தெரியாமல் குமார் அம்மான் கூறி வருவதாகக் குறிப்பிட்டார்.

“இதன் காரணமாகத்தான் சங்கங்களின் பதிவிலாகா அவரை மஇகா தலைமைச் செயலாளராக அங்கீகரிக்கவில்லை எனத் தோன்றுகிறது. கட்சியின் சொத்துக்களைப் பராமரித்து வரும் அறங்காவலர்களை அகற்றும் அதிகாரம் மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு மட்டுமே உள்ளது,” என்று சரவணன் மேலும் கூறினார்.