Home அவசியம் படிக்க வேண்டியவை ஓ.சி.ஐ., அட்டைகள் இந்தியக் குடியுரிமை அல்ல: இந்திய தூதரகம் விளக்கம்!

ஓ.சி.ஐ., அட்டைகள் இந்தியக் குடியுரிமை அல்ல: இந்திய தூதரகம் விளக்கம்!

956
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 1 – வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு என வழங்கப்படும் ஓ.சி.ஐ (OCI) அட்டைகள், இந்தியக் குடியுரிமைக்கான ஆவணமோ அல்லது பயணக் கடப்பிதழோ அல்ல என மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியக் குடியுரிமை வழங்கப்படுவதற்குப் பின்பற்றப்படும் நடைமுறை முற்றிலும் வேறுபட்டது என்றும், அதற்கும் ஓ.சி.ஐ., அட்டைகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் தூதரகம் மேலும் தெளிவுபடுத்தி உள்ளது.

OCI Cards India

#TamilSchoolmychoice

“ஓ.சி.ஐ., அட்டைகள் இந்தியா வழங்கும் பயணக் கடப்பிதழ் அல்ல. இது ஓர் ஆயுட்கால விசா. இதன் வழி சமூக, கல்வி மற்றும் பொருளாதார அடிப்படையில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் சில சலுகைகளைப் பெற முடியும். கடந்த ஜனவரி 20ஆம் தேதி இந்தியாவில் நடைபெற்ற வெளியுறவு அலுவலக ஆலோசனைகளின்போது மலேசிய குழுவிடம் இவ்விவரங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன,” என்று இந்தியத் தூதரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் ஆயுட்கால விசா சலுகை அளிக்கும் ஓ.சி.ஐ., அட்டைகள் வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த அட்டைகள் வழங்கப்படுவதாகவும் தூதரகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர், பிஐஓ அட்டைகள் மற்றும் ஓசிஐ அட்டைகள் என இரண்டு விதமான அடையாள அட்டைகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.

தற்போது இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரே அடையாள அட்டையாக ஓசிஐ -அதாவது ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா – என்ற பெயரில் கடந்த ஜனவரி 9 முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

இனி பிஐஓ அட்டைகள் வழங்கப்படாது என்றும் இந்தியத் தூதரகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.